ADDED : மார் 21, 2025 01:32 AM
40 விவசாயிகளுக்குதேனீ பெட்டி வினியோகம்
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கார்கூடல்பட்டி, மலையாம்பட்டி கிராமத்தில் திருச்செங்கோடு காந்தி ஆஸ்ரமம் சார்பில், விவசாயிகளுக்கு தேனீ வளர்க்க பயிற்சி வழங்கப்பட்டது. காதி மற்றும் கிராம தொழில் வளர்ச்சி நிறுவனம் ஏற்பாடுகளை செய்திருந்தது. கார்கூடல்பட்டியை சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தேனீக்கள் வளர்ப்பது, அதை பாதுகாக்கும் முறை, தேனை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு விதமான பயிற்சி வழங்கப்பட்டது. 10 நாள் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட, 40 விவசாயிகளுக்கு தலா, 10 தேனீ பெட்டி மற்றும் ஸ்டேண்ட் உள்ளிட்ட, 25,000 ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்பட்டன. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள விவசாயிகள், அதற்கான சான்றை வழங்கியதால் அவர்களுக்கு, முழுவதும் இலவசமாக உபகரணங்கள் வழங்கப்பட்டன. முதல் கட்டமாக, 15 விவசாயிகளுக்கு தேனீ பெட்டிகள் வழங்கப்பட்டன. அடுத்தடுத்து நாட்களில் மற்ற விவசாயிகளுக்கு வழங்கப்படும் என, முகாம் ஒருங்கிணைப்பாளரும், மத்திய நலத்திட்ட பிரிவின் மாநில துணைத்தலைவருமான லேகேந்திரன் தெரிவித்தார்.
