/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை: எஸ்.பி.,
/
வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை: எஸ்.பி.,
ADDED : மார் 07, 2024 02:12 AM
நாமக்கல், 'தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். தவறான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
சமீப காலமாக, வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான வீடியோக்கள், வலைதளங்களில் வேகமாக பரவி வருவதை காணமுடிகிறது.
இதுபோன்ற வீடியோக்கள், மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் சமூக விரோதிகள் சிலர் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.
போலியான செய்திகளை கேட்டும், வீடியோக்களை பார்த்தும் பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதற்றம் அடையவோ தேவையில்லை. இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அல்லது உதவி தேவைப்பட்டால், நாமக்கல் மாவட்ட போலீஸ் உதவி எண், 9498181216 அல்லது 100க்கு அழைக்கலாம்.
மேலும் உதவிக்கு, அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களை அணுகி உதவி பெறலாம். தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். அவ்வாறு செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

