/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொழில்நுட்ப வளர்ச்சியால் அழிந்துவரும் மூங்கில் தொழில்
/
தொழில்நுட்ப வளர்ச்சியால் அழிந்துவரும் மூங்கில் தொழில்
தொழில்நுட்ப வளர்ச்சியால் அழிந்துவரும் மூங்கில் தொழில்
தொழில்நுட்ப வளர்ச்சியால் அழிந்துவரும் மூங்கில் தொழில்
ADDED : ஆக 10, 2025 12:46 AM
நாமகிரிப்பேட்டை, தொழில்நுட்ப வளர்ச்சியால், மூங்கில் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதால், அதை நம்பி பிழைப்பு நடத்தி வரும் தொழிலாளர்கள் சிரமப்பட்டு
வருகின்றனர்.
தமிழகத்தில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, விழுப்புரம், ஈரோடு ஆகிய, எட்டு மாவட்டங்களில் மரவள்ளி சாகுபடி அதிகளவில் நடக்கிறது. சாகுபடி அதிகளவு நடந்தாலும், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சேகோ ஆலைகளில் மட்டுமே கிழங்கு மாவாகவும், சில ஆலைகளில் ஜவ்வரிசியாகவும் உற்பத்தி செய்யப்
படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் இயங்கி வந்த, 1,350 கிழங்கு மில்களும், தொழிலாளர்களை நம்பியே இருந்தன.
கிழங்குகளை அள்ளுதல், தோலுரித்தல், மீண்டும் அரவை மிஷினில் கொட்டுதல் என ஒவ்வொரு மில்லுக்கும் சராசரியாக, 100 மூங்கில் கூடைகள் தேவைப்பட்டன. அதேபோல், கிழங்கு அரைத்து மாவாக வரும்போது, திப்பி ஆகிய வற்றை வடிகட்டவும் மூங்கில் தட்டிகள் பயன்படுத்தப்பட்டன. எனவே, நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் மட்டும், 40க்கும் மேற்பட்ட இடங்களில் மூங்கில் கூடை பின்னும் தொழில் நடந்துவந்தது. குடிசை தொழிலாக செய்யப்படும் இதில், 250க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வந்தனர்.
சேகோ ஆலைகள் மட்டுமின்றி, மாட்டு வண்டிகளுக்கு கோதாணி, வீடுகளுக்கு முறம், விவசாய கூடை, வெல்ல கூடை, அப்பளம் பொறித்துபோட கூடை, பூக்கூடை, ஏனி, பட்டுப்புழு கூடு ஆகியவை செய்து விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், தற்போதைய நவீன காலத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவு பயன்பாட்டிற்கு வந்து விட்டது. முறம், கூடை ஆகியவற்றுக்கு மாற்றாக பிளாஸ்டிக் பொருட்களும், மூங்கில் ஏணிக்கு மாற்றாக அலுமினிய ஏணிகளும் வந்துவிட்டன. பட்டுக்கூடு வளர்க்க வலையை பயன்படுத்த தொடங்கி விட்டனர். மாட்டுவண்டிகளும், 90 சதவீதம் இல்லாமல் போனது.
அதேபோல், சேகோ ஆலைகளில் கிழங்கு அள்ளுவது, கொட்டுவது, எடுத்துச்செல்வது என அனைத்தும் இயந்திர மயமாகிவிட்டது. இதனால், மூங்கிலில் பொருட்கள் தயாரிக்கும் தொழில் நசிந்து கொண்டே வருகிறது. தற்போது, நமகிரிப்பேட்டையில் மூங்கில் கூடை தயாரிப்பவர்கள் இல்லை. சீராப்பள்ளியில், மூன்று இடங்களில் மட்டுமே இத்தொழில் நடந்துவருகிறது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் கூடை பின்னும் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.
இதுகுறித்து, சீராப்பள்ளியில் கூடை பின்னும் தொழில் செய்துவரும் முருகேசன், 63, கூறியதாவது:
பச்சை மூங்கிலை வாங்கி, அதை பிளந்து மூங்கில் பொருட்களை தயாரித்து வந்தோம். 20 ஆண்டுகளுக்கு முன் கிழங்கு சீசன் சமயங்களில் இரவு, பகலாக வேலை பார்த்து வந்தோம். படிப்படியாக சேகோ ஆலைகளில் நவீன இயந்திரங்கள் வந்துவிட்டதால், தொழிலாளர்களே குறைவாகத்தான் வேலை செய்கின்றனர். வடிகட்டும் தட்டிக்கு பதில் நவீன இயந்திரம் வந்துவிட்டது. அள்ளுவதற்கு ஜே.சி.பி., பிளாஸ்டிக் கூடைகள், கிழங்கை எடுத்து செல்ல கன்வேயர் பெல்ட்கள் வந்துவிட்டன.
இதனால், சேகோ ஆலைகளில் மூங்கில் தயாரிப்புகளை பயன்படுத்துவது வெகுவாக குறைந்துவிட்டது. அதேபோல், பட்டுக்கூடு வளர்க்க மூங்கில் கூடையை தவிர்த்து வலையை பயன்படுத்தின்றனர். இதன் காரணமாக, கொஞ்சம் கொஞ்சமாக இந்த தொழில் அழிந்தே விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

