ADDED : அக் 25, 2024 01:09 AM
தேனீ வளர்ப்பு கருத்தரங்கு
நாமக்கல், அக். 25-
நாமக்கல், மாநகராட்சி திருமண மண்டபத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தேனீ வளர்ப்பு குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:
குறைந்த முதலீட்டில், 100 சதவீதம் அரசு மானியத்தில், தேனீ வளர்ப்பு மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும். தேனீ வளர்ப்பு மூலம் ஆண்டுக்கு, 10 கிலோ வரை தேன் உற்பத்தி செய்திட இயலும். வீடுகளிலேயே தேனீ வளர்ப்பதால் தங்கள் வீட்டு பயன்பாட்டிற்கும், அதனை சந்தைபடுத்தி வருமானமும் ஈட்ட இயலும்.
தேன் சர்ம நோய்களுக்கு நிவாரணம், நினைவாற்றலை மேம்படுத்துதல், செரிமானத்தை மேம்படுத்துல், உடல் வெப்பத்தை தணித்தல், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. தேன் மெழுகு அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கவும், தேனீ மகரந்தம் மருத்துவ சத்து மிகுந்த பொருள், தேன் பசை இயற்கை மருத்துவ குணமிக்கது. தேன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவாக பயன்படுத்தலாம்.
இவ்வாறு பேசினார்.
முன்னதாக, தேனீ வளர்ப்பு குறித்த கண்காட்சியை பார்வையிட்டு, தேனீ வளர்ப்பு குறித்த கையேட்டை கலெக்டர் உமா வெளியிட்டார். வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பேபிகலா, துணை இயக்குனர்கள் புவனேஸ்வரி, (தோட்டக்கலைத்துறை), நாசர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்), பயிற்சி வல்லுனர்கள், விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

