/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முன்னாள் படை வீரர்களுக்கு தொழில் முனைவோராக அழைப்பு
/
முன்னாள் படை வீரர்களுக்கு தொழில் முனைவோராக அழைப்பு
முன்னாள் படை வீரர்களுக்கு தொழில் முனைவோராக அழைப்பு
முன்னாள் படை வீரர்களுக்கு தொழில் முனைவோராக அழைப்பு
ADDED : பிப் 21, 2025 07:25 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில், கலெக்டர் உமா தலைமையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலெக்டர் பேசியதாவது: முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க, ஒரு கோடி ரூபாய் வரை கடனுதவி வழங்க வகை செய்யும், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழி வகை செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம், தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இவர்களுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். ராணுவ பணியின்போது உயிரிழந்த படை வீரர்களின் குடும்பத்தினரும், இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
முன்னாள் படைவீரர்கள், அவர்களது மகன், மகள் மற்றும் மனைவி உள்ளிட்டோர் சுய தொழில் தொடங்கி, 10 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில், 890 முன்னாள் படைவீரர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 164 பேர், 55 வயதிற்குட்பட்டவர்கள், 35 பேர் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
மாவட்டத்தில், 129 முன்னாள் படைவீரர்கள், 34 பெண்கள், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி உள்ளவர்கள். புதிய தொழில் தொடங்க திட்ட அறிக்கைகள் தயாரிப்பது குறித்து, மாவட்ட தொழில் மையம் மற்றும் பூமாலை வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ஆலோசனை பெறலாம். இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் படை வீரர் உதவி இயக்குனர் நலன் ரகுபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.