ADDED : நவ 01, 2024 01:49 AM
எருமப்பட்டி, நவ. 1-
எருமப்பட்டியை சுற்றியுள்ள நவலடிப்பட்டி, கஸ்துாரிப்பட்டி, செல்லிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஆனி மாத பட்டமாக, விவசாயிகள் சின்ன வெங்காயம் நடவு செய்தனர். இந்த சின்ன வெங்காயம், தற்போது அறுவடை செய்யும் நிலைக்கு வந்ததால், மழையையும் பொருட்படுத்தாமல் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு வரை இப்பகுதியில் நல்ல மழை பெய்த நிலையில், தற்போது லேசான வெயில் அடிப்பதால், சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் தினசரி மார்க்கெட்டுகளுக்கு அனுப்புவதற்காக அறுவடை செய்த வெங்காயத்தை காய வைத்து, தாழ்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, வெங்காய வியாபாரி மூர்த்தி கூறியதாவது:
சின்ன வெங்காயம் அறுவடை பணி, தற்போது விறுவிறுப்பாக நடக்கிறது. சில நாட்களாக மழை பெய்த போதும், அறுவடை செய்த வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைப்பதால், தினசரி மார்க்கெட்டுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளேம்.
இவ்வாறு அவர் கூறினார்.