ADDED : டிச 23, 2024 09:14 AM
ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான் பேட்டையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி வாரச்சந்தை நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று கூடிய வாரச்சந்தையில் பரமத்தி, ப.வேலுார், மோகனுார், நாமக்கல், திருச்செங்கோடு, கந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாட்டுக்கோழிகளை வியாபாரிகளும், விவசாயிகளும் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
கடந்த வாரம், நாட்டுக்கோழி கிலோ, 400 ரூபாய்க்கு விற்றது. தற்போது கிலோவுக்கு, 200 ரூபாய் கூடுதலாகி, 600 ரூபாய்க்கு விற்றதால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து விற்பனையாளர்கள் கூறுகையில், 'தற்போது, நாட்டுக்கோழி மிகவும் குறைவாக தான் சந்தைக்கு வருகிறது. கிராமப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று வாங்கி வருகிறோம். வாங்கும் இடத்திலேயே விலையை உயர்த்தி விட்டனர். இதனால் கிலோவுக்கு, 200 ரூபாய் அதிகமாகி விட்டது,' என்றனர்.

