ADDED : மார் 11, 2024 11:38 AM
குமாரபாளையம்: மகா சிவராத்திரியையொட்டி, குமாரபாளையத்தில், தட்டான்குட்டை மயான பெரியாயி அம்மன், அங்காளம்மன் கோவிலில் மயான சூறையாடுதல், மகா குண்டம் விழா கடந்த, 24ல் முகூர்த்தகால் நடுதல், பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம், காவிரி ஆற்றிலிருந்து பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து, மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
மாலை நடந்த விழாவில், பெண்கள் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் வந்தனர். தொடர்ந்து, கணபதி ஹோமம், பெரியாண்டிச்சி அம்மன் கண் திறப்பு விழா ஆகியவை நடந்தன. நேற்று, மயானத்திலிருந்து காட்டேரி அழைத்து வருதல், மாசானம் புறப்படுதல், பெரியாண்டிச்சி அம்மனுக்கு தாலாட்டு விழா நடந்தது. அப்போது, மாசாணி அம்மன் வேடமணிந்த பக்தர் ஒருவர், கோழி, ஆடுகளை கடித்தபடி ஆக்ரோஷமாக சென்றார்.
இதில், ராஜம் தியேட்டர் பகுதியிலிருந்து பவர் ஹவுஸ் மயான காளி கோவில் வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால், சேலம், சங்ககிரி, திருச்செங்கோடு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், ஆனங்கூர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. நாளை, மகா குண்டம் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

