/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இன்று கடைகள் செயல்படும் வணிகர் சங்க தலைவர் தகவல்
/
இன்று கடைகள் செயல்படும் வணிகர் சங்க தலைவர் தகவல்
ADDED : செப் 29, 2025 02:20 AM
நாமக்கல்:'தமிழகம் முழுவதும் இன்று, கடைகள் வழக்கம் போல் செயல்படும்' என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், வேலச்சாமிபுரத்தில், த.வெ.க., தலைவர் விஜய், நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, திரண்டிருந்த மக்கள் நகர இடமின்றி, ஒருவருக்கொருவர் முண்டியடித்தனர். அதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என, 40 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம், நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், கரூர் மாவட்டத்தில், நேற்று ஒரு நாள் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
இதற்கிடையில், 'இன்று தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும்' என, சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், வணிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.இதுகுறித்த, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்ட அறிக்கையில், 'கரூர் துயர சம்பவத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில், இன்று(நேற்று) ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், கரூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. நாளை (இன்று), தமிழகம் முழுவதும் கடைகள் வழக்கம் போல் செயல்படும்' என தெரிவித்துள்ளார்.