/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை மட்டும் விதைக்க பரிந்துரை
/
அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை மட்டும் விதைக்க பரிந்துரை
அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை மட்டும் விதைக்க பரிந்துரை
அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை மட்டும் விதைக்க பரிந்துரை
ADDED : அக் 26, 2025 12:26 AM
நாமக்கல், 'அதிக விளைச்சல் பெற, சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு உதவி இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நல்ல லாபகரமான வேளாண்மைக்கு நல்ல விதை, ஒருங்கிணைந்த பயிர் மேலாண் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முக்கியம். நல்ல விதை அல்லது தரமான விதை என்பது, பாரம்பரிய குணம், அதிகபட்ச முளைப்புத்திறன், பிற ரகங்கள், களை செடிகளின் விதைகள் இல்லாதது, பூச்சி நோய்தாக்கம் இல்லாதது, மண், செடிகளின் பாகங்கள் இல்லாமல் இருத்தல் ஆகும்.
சான்று விதை என்பது, ஆதாரவிதை (வெள்ளை அட்டை பொருத்தப்பட்டது) உபயோகித்து, விவசாயியின் வயலில் உற்பத்தியாளரால் சாகுபடி செய்யப்படுகிறது. பயிர் பூக்கும் தருணத்திற்கு, 15 நாட்கள் முன்னதாக, விதைச்சான்றளிப்பு துறையில் விதை பண்ணையாக பதிவு செய்யப்படுகிறது. விதைப்பண்ணை பூக்கும் தருணத்திலும், முதிர்ச்சி பருவத்திலும், விதைச்சான்று அலுவலரால் வயலில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வின்போது, வயல் தரம் மற்றும் விதைத்தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டுமே, உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு, அவை விற்பனைக்கு தயாராகின்றன.
விதைப்பண்ணையில் இருந்து விதை கொள்முதல் செய்யப்பட்டு, அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. பகுப்பாய்வில் தேறிய விதை குவியலுக்கு சான்றட்டை பொருத்தப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. விவசாயிகள், இதுபோன்ற சான்று பெற்ற விதைகளை வாங்கி பயன்படுத்துவதன் மூலம், அதிக விளைச்சல் பெற்று அதிக லாபம் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

