/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செம்மறி ஆடு பராமரிப்பு முறை கால்நடைத்துறை ஆலோசனை
/
செம்மறி ஆடு பராமரிப்பு முறை கால்நடைத்துறை ஆலோசனை
ADDED : நவ 23, 2025 01:46 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி பகுதியில் விவசாயம் மட்டுமின்றி, ஆடு வளர்ப்பும் பிரதானமாக உள்ளது. இதில், செம்மறி ஆடுகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் ஆடுகள் உயிரிழப்பு ஏற்பட்டு, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. பட்டி சரியாக அமைக்காவிட்டால், சளி, இருமல், வாய்புண் நோய், புழு புண், குட்டிகளில் வளர்ச்சி குன்றுதல் காரணமாக ஆடுகள் இறந்து போக வாய்ப்புள்ளது. இதனால், ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படும். இவற்றை தடுக்க, ஆடுகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டி தரம்புகள் விசாலமாக அமைக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ஒரு ஆட்டுக்கு, 4 சதுர அடி இடைவெளி விடவேண்டும். பட்டிக்கு மூன்றில் ஒரு பங்கு அளவு மட்டும் சாக்கு படுதா போடுதல் போதுமானது. காலையில் பட்டிக்குள் இளம் வெயில் விழும்படி கிழக்கு பகுதியில் வெற்றிடம் விட வேண்டும். தென்னந்தோப்பு, மாந்தோப்பு போன்ற ஈரப்பதமான இடங்களில் பட்டி அமைக்கக்கூடாது. மேடான இடத்தில் பட்டி அமைக்க வேண்டும். தினமும் பட்டியை சுத்தப்படுத்துதல் வேண்டும். பட்டி தரம்புகளின் சுற்றுப்பகுதி, சாலை மற்றும் பெரிய ஆடுகளின் மீது கால்நடை மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிப்பது நல்லது.
இதனால், வாய்புண் நோயை பரப்பும் பூச்சிக்கடி மற்றும் புற உண்ணிகளை தவிர்க்கலாம். மாலையில் வேம்பு, யூக்கலிப்டஸ், தும்பை மற்றும் இலை சருகுகள் கொண்டு பட்டிக்கு புகை போடலாம். இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து ஆடு வளர்க்கும் விவசாயிகள் ஆடுகளை பனிக்கால நோய்களிலிருந்து பாதுகாத்து நஷ்டத்தை தவிர்த்து கொள்ளலாம்.
இவ்வாறு கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது.

