ADDED : டிச 17, 2024 01:47 AM
நாமக்கல், டிச. 17-
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 480 மனுக்கள் வரப்பெற்றன.
அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, தாட்கோ மூலம், 15 பேருக்கு, மளிகை கடை, பயணியர் வாகனம், கறவை மாடு, ஆடு வளர்ப்பு தொழில்கள் மேற்கொள்ள அரசு மானியத்தில், 58.34 லட்சம் ரூபாய் மதிப்பில் தொழில் கடனுதவிகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு கலெக்டர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 3 பேருக்கு, கிரட்ஸ், ஊன்றுகோல், காதொலிக்கருவி என, மொத்தம், 18 பேருக்கு, 58.34 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.