/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுார் காவிரியில் நாளை குளிக்க தடை
/
ப.வேலுார் காவிரியில் நாளை குளிக்க தடை
ADDED : ஆக 02, 2025 02:09 AM
ப.வேலுார், ஆக. 2
ஆடிப்பெருக்கு நாளான நாளை, ப.வேலுார் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதித்து, ப.வேலுார் போலீ சார் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து, ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா கூறியதாவது:
மேட்டூர் அணை நீர்மட்டம், முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் காவிரி ஆற்றில் பொதுமக்கள் நலன் கருதி, நாளை ஆடிப்பெருக்கு, 18 அன்று நடக்க இருந்த பரிசல் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அன்று மாலை, 6:00 மணிக்கு ப.வேலுார் காவிரி கரையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மோட்ச தீபத்துக்கு சிறப்பு பூஜை செய்து ஆற்றில் மோட்ச தீபம் விடுவது வழக்கம்.
மேலும், மோட்ச தீபத்துடன் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடும் பகுதியில் ஆழமாக உள்ளதால் பொதுமக்கள் நுழைய அனுமதி கிடையாது. பொதுமக்களின் நலன் கருதி காசி விஸ்வநாதர் கோவில் பகுதியான காவிரி ஆற்றுக்குள் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை ப.வேலுாரில் உள்ள காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவும், குடிபாட்டு கோவில்களின் பொருட்களை சுத்தம் செய்து வழிபாடு நடத்தவும், பரிசல் போட்டிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மாலையில் காவிரி ஆற்றில் பல நுாற்றாண்டுகளாக விடப்படும் வழக்கமான மோட்ச தீபம் விடப்படும். இதில் காவிரி ஆற்றிற்குள் வர பொதுமக்களுக்கு அனுமதியில்லை. பொதுமக்கள் மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சியை காவிரி பாலத்தில் இருந்து பார்க்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தருமாறு காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.