/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கனரக வாகனங்களுக்கு தகுதிச்சான்று பெறும் கட்டண உயர்வு திட்டத்தை கைவிட கோரிக்கை
/
கனரக வாகனங்களுக்கு தகுதிச்சான்று பெறும் கட்டண உயர்வு திட்டத்தை கைவிட கோரிக்கை
கனரக வாகனங்களுக்கு தகுதிச்சான்று பெறும் கட்டண உயர்வு திட்டத்தை கைவிட கோரிக்கை
கனரக வாகனங்களுக்கு தகுதிச்சான்று பெறும் கட்டண உயர்வு திட்டத்தை கைவிட கோரிக்கை
ADDED : நவ 22, 2025 02:28 AM
நாமக்கல், 'கனரக வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ் பெற தற்போது உள்ள கட்டணத்தைவிட பல மடங்கு உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும்' என, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு தலைவர் தன்ராஜ், செயலாளர் ராமசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989-ல், இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரையிலான அனைத்து வாகனங்களுக்கும், தகுதிச்சான்றிதழ் கட்டணத்தை உயர்த்துவது சம்பந்தமாக, கடந்த, 11ல், வழிகாட்டு நெறிமுறையை வழங்கியுள்ளது. மேலும், வழிகாட்டு நெறிமுறை சம்பந்தமாக ஆட்சேபனை மற்றும் பரிந்துரை ஏதேனும் இருந்தால் தெரிவிக்க கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய அரசு, கனரக வாகனங்களுக்கு, தகுதிச் சான்றிதழ் பெற தற்போது உள்ள கட்டணத்தைவிட பல மடங்கு உயர்த்த உத்தேசித்துள்ளது.
இதில், பத்து முதல், 13 ஆண்டுகளுக்கு உட்பட்ட வாகனங்களுக்கு, 1,000 ரூபாய், 13 முதல், 15 ஆண்டுகளுக்கு உட்பட்ட வாகனங்களுக்கு, 5,000 ரூபாய், 15 மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு, 25,000 ரூபாய் என, தகுதிச்சான்றிதழ் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும்பட்சத்தில், ஓரிரு வாகனங்களை வைத்து தொழில் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உண்டாகும். இவர்கள், பெரும்பாலும், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை வைத்துக்கொண்டு நெல், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால், இவர்கள் தொழிலை விட்டே வெளியேற்றப்படும் அவலநிலைக்கு தள்ளப்படுவர். மேலும், கொரோனா பெருந்தொற்றுக்குப்பின், பல்வேறு தொழில்கள் நலிவடைந்துவிட்ட நிலையில், லாரிகளுக்கு சரியாக லோடு கிடைக்காமலும், சுங்க கட்டணம், டீசல் விலை, காப்பீட்டு தொகை, உதிரி பாகங்கள் ஆகியவற்றின் விலை உயர்வுகளால், லாரி தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது.
இந்நிலையில், தகுதி சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்படும்போது, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஓரிரு வாகனங்களை வைத்திருக்கும் பெரும்பான்மையான லாரி உரிமையாளர்கள், தங்களது குடும்பங்களை காப்பாற்ற முடியாமல், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்படுவர். அதனால், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், இந்த கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

