ADDED : ஜூன் 03, 2026 03:50 AM
சேந்தமங்கலம்:பேளுக்குறிச்சியில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில், 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த அரசு பள்ளியில் கொல்லிமலை சுற்று வட்டாரத்தில் இருந்து, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அங்குள்ள பழங்குடியினர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பழங்குடியினர் மாணவ, மாணவியர் தங்கும் விடுதியை மூடினர். இதனால் கொல்லிமலை பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர் நாமகிரிப்பேட்டை, களங்காணி, சேந்தமங்கலம், முத்துகாப்பட்டி, திருமலைப்பட்டி உள்ளிட்ட அரசு பள்ளிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.பேளுக்குறிச்சியில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த பழங்குடியினர் மாணவ, மாணவியர் தங்கும் விடுதியை திடீரென மூடியதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மீண்டும் அந்த விடுதியை திறக்க வேண்டும் என, அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
