ADDED : மே 13, 2025 02:30 AM
நாமக்கல் :கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், கட்டட பொறியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் வெங்கடாஜலம் தலைமை வகித்தார். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; மணல் குவாரிகளை அரசே திறக்க வேண்டும் என, கோஷமிட்டனர். தொடர்ந்து, தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி கூறியதாவது:
ஒன்றரை ஆண்டாக, அரசு மணல் குவாரிகள் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், 55,000 மணல் லாரிகள் வேலைவாய்ப்பை இழந்துள்ளன. லட்சக்கணக்கான டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. கல் குவாரி, கிரஷர் நிறுவனங்கள், கடந்த, நான்கு மாதத்தில், எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி கற்கள் போன்ற கனிமங்களின் விலையை, ஒரு யூனிட்டிற்கு, 2,000 ரூபாய் உயர்த்தி உள்ளன.
அதனால், கட்டுமான தொழில் முற்றிலும் முடங்கி உள்ளது. மணல் குவாரியை திறக்க வேண்டும். அனைத்து கல் குவாரி, கிரஷரை அரசுடமையாக்கி, அரசே இணையதளம் பதிவு மூலம் தரமாக, குறைந்த விலையில் வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, வரும், 23ல் தமிழகம் முழுவதும் லாரிகளை இயக்காமல் நிறுத்தி வைத்து, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.