ADDED : ஏப் 24, 2025 01:59 AM
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை அடுத்த மூலப்பள்ளிப்பட்டி, கோரையாற்றை சேர்ந்தவர் அமாவாசை மகன்  முருகன், 56; இவருக்கு, மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூன்ற மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது.
மூன்றாவது மகள் பார்வதி, கணவனை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். மகன்  குமரேசன், 27; இவர், கடந்த, ஏழு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டு, மங்களபுரத்தில் தனியாக வசித்து வருகிறார்.
பெற்றோருடன் தொடர்பில் இல்லாமல் இருந்த குமரேசன், நேற்று கோவில் திருவிழாவிற்காக பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டை மூன்றாவது மகளுக்கு எழுதி வைப்போம் என, முருகன் பேசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த குமரேசன், அங்கிருந்த கட்டையால் தந்தை முருகன், தாய் மல்லிகா, அக்கா பார்வதி ஆகிய, மூவரையும் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த மூவரும், நாமகிரிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புகார்படி, நாமகிரிப்பேட்டை போலீசார், குமரேசனை கைது செய்தனர்.

