/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி
/
தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 11, 2025 01:38 AM
நாமக்கல், நாமக்கல்லில் நடந்த உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் துர்கா மூர்த்தி துவக்கி வைத்தார்.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகளில், 'உலக தற்கொலை தடுப்பு' தினத்தை முன்னிட்டு, 'நேரேட்டிவ் ஆன் சூசைட்' என்ற கருப்பொருளை கொண்டு, தற்கொலை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தற்கொலை எண்ணம் உடையவர்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஒரு வாரமாக நடந்தது.
இதில், 5 பள்ளிகள், 6 கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள, மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார். மேலும், உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பலகையில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். முன்னதாக, உலக தற்கொலை தடுப்பு தினத்தை கடைப்பிடிக்கும் வகையில், கலெக்டர் தலைமையில், அனைத்து துறை அலுவலர்களும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற, 105 அரசு கல்லுாரிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.