/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏரியில் சடலம் மீட்கப்பட்ட நிலையில் கொலை வழக்காக மாற்ற உறவினர்கள் மறியல்
/
ஏரியில் சடலம் மீட்கப்பட்ட நிலையில் கொலை வழக்காக மாற்ற உறவினர்கள் மறியல்
ஏரியில் சடலம் மீட்கப்பட்ட நிலையில் கொலை வழக்காக மாற்ற உறவினர்கள் மறியல்
ஏரியில் சடலம் மீட்கப்பட்ட நிலையில் கொலை வழக்காக மாற்ற உறவினர்கள் மறியல்
ADDED : ஜூன் 28, 2024 01:55 AM
திருச்செங்கோடு, ஜரியில் சடலம் மீட்கப்பட்ட நிலையில், கொலை வழக்காக மாற்ற வேண்டும் என உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு அடுத்த, எலச்சிபாளையம் ஒன்றியம் சத்திநாயக்கன்பாளையம் ஊராட்சி பட்டங்காடு செல்லும் ரோட்டில் பெரிய ஆயக்குளம் ஏரி உள்ளது. இதில், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத, 43 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இறந்தவர் வலது கையில் மணிகண்டன் என பச்சை குத்தியிருந்தது. திருச்செங்கோடு ரூரல் போலீசார், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், ஏரியில் செத்து மிதந்தவர் சக்தி நாயக்கன்பாளையம் ஊராட்சி, கோவில்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்த மணிகண்டன், 45, என்பதும் இவருக்கு சரியாக வாய் பேச முடியாததால் மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெற்று வந்ததும் தெரிந்தது. இவரது மனைவி அறிவுக்கொடியும் மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகன் உள்ளார்.
கடந்த ஒரு வாரமாக மணிகண்டனை காணவில்லை; வேலை விஷயமாக வெளியூர் சென்று இருக்கலாம் என கருதி வீட்டில் இருந்தவர்கள் தேடவில்லை. இந்நிலையில் ஏரியில் செத்து மிதந்தது மணிகண்டன் என்பதை உறுதி செய்தனர். இது குறித்து விசாரித்த போது கடந்த, நான்கு நாட்களுக்கு முன்பு மணிகண்டனை இருவர் அழைத்துச் சென்றது தெரிந்தது. எனவே இதை கொலை வழக்காக பதிந்து விசாரிக்க வேண்டும் என, உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்ததால், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை முன், வேலுார் சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் விரைந்து வந்து, மணிகண்டனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அழைத்து சென்றவர்கள் யார் என்பதை விசாரித்த பிறகு, கொலை வழக்காக பதிவு செய்யப்படும் என உறுதி அளித்ததையடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
மணிகண்டனின் அண்ணன் முத்துக்குமார், உறவினர் சுப்பிரமணி ஆகியோர் கூறுகையில்,'' இறந்த மணிகண்டன் மட்டுமின்றி, அவரது மனைவி அறிவுக்கொடியும் மாற்றுத்திறனாளியாக இருப்பதால், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்த வேண்டும்,'' என்றனர்.