/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிணற்றின் அருகே திடீர் குழி; மக்கள் அச்சம்
/
கிணற்றின் அருகே திடீர் குழி; மக்கள் அச்சம்
UPDATED : மே 16, 2024 06:42 AM
ADDED : மே 16, 2024 06:13 AM

கூடலுார் : கூடலுார் பாண்டியார் டான்டீ தொழிலாளர்கள் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் சேதமடைந்த கிணற்றின் அருகே திடீர் குழி ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலுார் குடோன் அருகே, பாண்டியார் அரசு தேயிலை தோட்ட (டான்டீ) தொழிலாளர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. டான்டீ நிர்வாகம் அப்பகுதியில் கிணறு அமைத்து, அதிலிருந்து தொழிலாளர்கள் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறது.
அங்குள்ள கிணறு பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்ததால், அதில் உள்ள தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாகவும் இல்லை. இதனால், குடிநீருக்கு சிரமப்பட்டு வரும் தொழிலாளர்கள், அப்பகுதியில் உள்ள குட்டையில் இருந்து தண்ணீரை சுமந்து வந்து குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கிணற்றை ஒட்டிய பகுதியில் மண் உள்வாங்கியதுடன், ஐந்து அடிக்கு குழி ஏற்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தொழிலாளர்கள் கூறுகையில், 'நடப்பாண்டு கடும் வறட்சியிலும், இந்த கிணத்தில் தண்ணீர் இருந்தது. ஆனால், கிணறு சேதம் அடைந்து தண்ணீர் குடிக்க முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில், கிணற்றை ஒட்டி மண் உள்வாங்கி பெரிய குழி ஏற்பட்டுள்ளது.
இவை, மேலும், பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. எனவே, குழியை மூடி கிணற்றை சீரமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.