காய்கறி விதைகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! சாகுபடி நடந்து வருவதால் ஆய்வு மையம் எச்சரிக்கை
காய்கறி விதைகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! சாகுபடி நடந்து வருவதால் ஆய்வு மையம் எச்சரிக்கை
UPDATED : ஜூலை 22, 2026 05:38 PM
ADDED : ஜூலை 22, 2026 05:32 PM
ஊட்டி: 'விவசாயிகளுக்கு மலை காய்கறி விதைகளை அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் பாரபட்சம் பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, விதை ஆய்வு மைய துணை இயக்குனர் சுமதி எச்சரித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, சாகுபடி காலம் துவங்கியிருப்பதால், ஊட்டி உட்பட மாவட்ட முழுவதும் கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறி பயிர்கள் பரவலாக சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
விதிகளை கடைப்பிடிக்கணும் மலை காய்கறி சாகுபடிக்கான விதைகளை விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள தனியார் விற்பனை நிலையங்கள் வாயிலாக வாங்கி பயன்படுத்துகின்றனர். விதை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு விதைகளை விற்பனை செய்யும் போது, நல்ல முளைப்பு திறன் உடைய விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
மேலும், 'விதைகளை விற்கும் போது கட்டாயமாக விவசாயிகளுக்கு விற்பனை ரசீது; விதை விற்பனை உரிமம் இல்லாம் விதைகள் விற்பனை செய்ய கூடாது,' என, விதை விற்பனையாளர்கள் மத்தியில், விதை ஆய்வு மையத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பதுக்கி வைத்தால் புகார் அளிக்கலாம் இதற்கிடையே, விவசாயிகள் விதை விற்பனை உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே விதைகளை வாங்கி பயன் பெற வேண்டும். 'இடைதரகர்கள் யாரேனும் விதைகளை விற்பனை செய்ய அணுகினால் உடனே விதை ஆய்வு மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விதைகளை பதுக்கி வைத்து தேவையினை அதிகரிக்க செய்து அதிக விலைக்கு யாரேனும் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விதை கட்டுப்பாட்டு ஆணை, 1983 ன் கீழ், கோர்ட் வாயிலாக நடவடிக்கை எடுக்க விதை பரிசோதனை ஆய்வு மையத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
விதை ஆய்வு மைய துணை இயக்குனர் சுமதி கூறுகையில், '' நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு தரமான விதைகளை விதை சட்டத்தின் விதி முறைகளுக்கு உட்பட்டு அனைத்து உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும். என, சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதை சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் விதை விற்பனையாளர்கள் மீது விதை சட்டங்களின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.
