/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இலவச சைக்கிளுக்கு பதிலாக மாற்று திட்டம் அவசியம் மாணவர்களுக்கு தரமான மழை கோட்டு, ஷூ, தொப்பி வழங்கினால் பயன்
/
இலவச சைக்கிளுக்கு பதிலாக மாற்று திட்டம் அவசியம் மாணவர்களுக்கு தரமான மழை கோட்டு, ஷூ, தொப்பி வழங்கினால் பயன்
இலவச சைக்கிளுக்கு பதிலாக மாற்று திட்டம் அவசியம் மாணவர்களுக்கு தரமான மழை கோட்டு, ஷூ, தொப்பி வழங்கினால் பயன்
இலவச சைக்கிளுக்கு பதிலாக மாற்று திட்டம் அவசியம் மாணவர்களுக்கு தரமான மழை கோட்டு, ஷூ, தொப்பி வழங்கினால் பயன்
ADDED : ஜூலை 01, 2024 02:23 AM

ஊட்டி;'மலை மாவட்டத்தில், மாணவ, மாணவிகளுக்கான இலவச சைக்கிள் வழங்குவதற்கு பதிலாக, தரமான முறையில் மழை கோட்டு, ஷூ, தொப்பி வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவ, மாணவியர் பள்ளிக்கு சரியான நேரத்துக்கு செல்ல வேண்டும் என்பதற்காக, மாநில அரசால் இலவச சைக்கிள் திட்டம் துவக்கப்பட்டது.
அதில், நீலகிரி மாவட்டத்தில், 53 பள்ளிகளில் படிக்கும், 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு தோறும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த, 2023-24 கல்வி ஆண்டில், 4,087 மாணவ, மாணவிகளுக்கு, இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மலை மாவட்டத்தில் இந்த திட்டத்தால் எந்த பயனும் ஏற்படவில்லை.
மாறாக சைக்கிள் வாங்கும் பெரும்பாலான மாணவ, மாணவியர் சில மாதங்களில் பழைய இரும்பு கடைக்கு, சைக்கிளை கிடைக்கும் விலைக்கு விற்பது தொடர்கிறது.
இதனால், இங்குள்ள மாணவ, மாணவியர் பயன்பெரும் வகையில், மாற்றுத்திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோரிம் கோரிக்கையாக உள்ளது.
அரசு, சமூக ஆர்வலர், ஊட்டி: இலவச சைக்கிளை வாங்கி செல்லும் மாணவர்கள் கிராமப்புறங்களில் அவ்வப்போது ஓட்டினாலும், பள்ளிக்கு எடுத்து செல்ல வாய்ப்பில்லை. மேடு, பள்ளமாக உள்ள மலை மாவட்ட சாலையில் மாணவர்கள் அரசு பஸ்களில் தான் பயணிக்க வேண்டி உள்ளது. இதனால், மலை மாவட்ட மாணவர்ளுக்கு இலவச சைக்கிள் திட்டத்திற்கு பதிலாக, மாற்று திட்டத்தை பரிசீலனை செய்து அரசு அறிவிக்க வேண்டும்.
அகமதுயாஷின், அரசு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர், கூடலுார்: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச சைக்கிள் தரம் இல்லாததால், சில மாதங்களிலேயே அவை பழைய இரும்பு கடைக்கு சென்று விடுகிறது. எனவே, நீலகிரி மாணவர்களுக்கு மட்டும் சைக்கிளுக்கு மாற்றாக தரமான சீருடை துணிகளை வழங்கினால், அவர்கள் சரியான அளவில் தைத்து ஓராண்டுக்கு பயன்படுத்த முடியும்.
முகமது பரூக், வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர், ஊட்டி: நீலகிரியில் மாணவ,மாணவியர் சைக்கிளில் பள்ளிக்கு செல்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. இங்குள்ள காலநிலை; மேடு, பள்ளமான பாதைகள் முக்கிய காரணம். கடந்த ஆட்சியில் இருந்து இங்கு கொடுக்கப்படும் சைக்கிள் வீணாகி வருகிறது. இதற்கு பதிலான, தரமான முறையில் மழை கோட்டு, ஷூ, தொப்பி வழங்கினால், மழை காலத்தில் பெரும் பயன் ஏற்படும்.
மனோகரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், குன்னுார் : நீலகிரியில் சைக்கிள் பயன்பாடு குறைவாக உள்ளது. இதனால், சைக்கிளுக்கு பதிலான மாணவ, மாணவியருக்கு மட்டும் தனித்தனியாக சிறப்பு பஸ்களை காலை, மாலை நேரங்களில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கான கோரிக்கையை சில ஆண்டுகளாக வலியுறுத்தியும் எந்த பயனும் இல்லை. தற்போது இலவச சைக்கிளை பெரும்பாலும் பழைய இரும்பு கடைகளில் தான் காண முடிகிறது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், '' மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி என, 53 பள்ளிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. பெற்றோரின் கோரிக்கைகள் குறித்து, மாவட்ட கலெக்டர் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்,'' என்றார்.