/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளை காப்பு நிகழ்ச்சி
/
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளை காப்பு நிகழ்ச்சி
ADDED : மார் 13, 2025 09:09 PM

குன்னுார்; குன்னுாரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
குன்னுார் ஜான்ஸ் சர்ச் மண்டபத்தில், மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், சமுதாய வளை காப்பு நிகழ்ச்சி நடந்தது.
நகராட்சி தலைவி சுசிலா தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி தலைமை வகித்து பேசுகையில், ''கர்ப்ப காலங்களில் ஊட்டச்சத்து உணவு கட்டாயம் உண்பதுடன், மகிழ்ச்சியாக இருந்தால், ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம்,'' என்றார்.
தொடர்ந்து, கர்ப்பிணியருக்கு மாலை அணிவித்து தட்டு, வளையல், குங்குமம், பழங்கள், இனிப்பு வகைகள் உட்பட பல்வேறு,மங்கள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
பாரம்பரிய உணவான கம்பு, ராகி, கேழ்வரகு, திணை, குதிரைவாலி, வேர் கடலை உள்ளிட்ட பல்வேறு சத்து உணவு, காய்கறி, கீரை வகைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டன. அனைவருக்கும் மதிய உணவாக, 6 வகை உணவுகள் வழங்கப்பட்டன. மேற்பார்வையாளர்கள் கண்ணம்மா, உமாதேவி, ஈஸ்வரி, வட்டார ஒருங்கிணைப்பாளர் காளீஸ்வரி, மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர், கவுன்சிலர்கள் ராமசாமி, ஆரோக்கியதாஸ், சமீனா முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை அங்கன்வாடி பணியாளர்கள் செய்திருந்தனர்.