ஆர்.டி.ஐ., மனுக்களுக்கு பதில் அளிப்பதில்லை முழுமையான, தெளிவான தகவல் அவசியம்
ஆர்.டி.ஐ., மனுக்களுக்கு பதில் அளிப்பதில்லை முழுமையான, தெளிவான தகவல் அவசியம்
ADDED : ஆக 26, 2026 06:23 PM
குன்னூர்:
தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்களுக்கு விரைந்து பதிலளிப்பதில்லை. என, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கோரும் விவரங்களை அரசுத் துறைகள் தாமதமின்றி, தெளிவாக வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை நிலுவையில் உள்ள ஆர்.டி.ஐ., மனுக்களுக்கு உடனடியாக தகவல்களை வழங்கப்படுவதில்லை. என, புகார்கள் உள்ளன.
குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கூறுகையில், லஞ்ச ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யும் நோக்கில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து, மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அதற்கான தகவல்கள் கேட்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு அரசு துறைகளில் தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்களுக்கு உரிய தகவல்கள் வழங்குவதில்லை. என, மக்கள் புகார்கள் எழுப்பி வருகின்றனர்.
அனைத்து துறைகளுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்கி, மக்களின் மனுக்களுக்கு தாமதமின்றி முழுமையான மற்றும் தெளிவான தகவல்களை வழங்க மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. என்றார்.
