/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி; வனத்துறை விசாரணை
/
மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி; வனத்துறை விசாரணை
மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி; வனத்துறை விசாரணை
மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி; வனத்துறை விசாரணை
ADDED : ஜூலை 31, 2024 11:57 PM

கூடலுார் : கூடலுார் தேவர்சோலை அருகே, மின் கம்பியில் சிக்கிய காட்டு யானை, 'ஷாக்' அடித்து பரிதாபகமாக உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை அஞ்சுகுன்னு, குச்சிமுச்சி சுற்றுவட்டார பகுதிகளில், காட்டு யானைகள் இரவில் முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதற்கு தீர்வு காண மக்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, வனத்துறையினர் முதுமலை 'கும்கி' யானைகள் உதவியுடன், காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேவர்சோலை பாடந்துறை அருகே உள்ள, மச்சிகொல்லி பகுதியில், நேற்று முன்தினம் அதிகாலை ஆண் காட்டு யானை வந்துள்ளது. அங்குள்ள பாக்கு மரத்தை காட்டு யானை கீழே தள்ளி உள்ளது. பாக்கு மரம் மச்சிகொல்லி சாலை வழியாக செல்லும் மின் கம்பி மீது விழுந்தது. அப்பகுதிக்கு சென்ற காட்டு யானை மின் கம்பியில் சிக்கி 'ஷாக்' அடித்து பரிதாபமாக உயிரிழந்தது. நேற்று காலை அந்த வழியாக நடந்து சென்ற சிலர், வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, உதவி வன பாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர் ராதாகிருஷ்ணன் மற்றும் வன ஊழியர்கள் யானையின் உடலை ஆய்வு செய்தனர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.
வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த யானைக்கு, 35 வயது இருக்கும். யானை சாய்த்த பாக்கு மரம் மின்கம்பி மீது விழுந்தது. அந்த மின் கம்பியில் சிக்கி காட்டு யானை 'ஷாக்' அடித்து உயிரிழந்தது,' என்றனர்.