/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மசினகுடியில் கட்டுக்குள் வந்தது வனத்தீ
/
மசினகுடியில் கட்டுக்குள் வந்தது வனத்தீ
ADDED : மே 02, 2024 11:41 PM

கூடலுார்:முதுமலை, மசினகுடி சிங்கார வனப்பகுதியில் ஏற்பட்ட வனத்தீ, மூன்று நாட்களுக்குப் பின் கட்டுப்படுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், கோடை மழை ஏமாற்றியுள்ளதால் வனப்பகுதியில் வறட்சியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி வனக்கோட்டம் பெந்தட்டி காட்டு பகுதியில், ஏற்பட்ட வனத்தீ, 29ம் தேதி இரவு, முதுமலை மசினகுடி வனக்கோட்டம், சிங்கார வனச்சரகம், ஆணிக்கல் கோவில் அருகே, கல்ஸ்கொம்பை வனப்பகுதியில் பரவியது.
வனச்சரகர் ஜான் பீட்டர், தயானந்தன் உட்பட, 60 வன ஊழியர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம், பணிகளை, மசினகுடி கள இயக்குனர் அருண்குமார் ஆய்வு செய்தார்.
மூன்று நாட்களாக வனத்தீயை கட்டுப்படுத்த போராடி வந்த வனத்துறையினர், எதிர் தீ மூலம் நேற்று முன்தினம், இரவு தீ பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்தினர்.
நேற்று, காலை வனத்தீ ஏற்பட்ட பகுதிகளில் வன ஊழியர்கள் தண்ணீர் கேன்களுடன் ஆய்வு செய்து, மரங்களில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'தீ ஏற்பட்ட பகுதியில் கடுமையான வறட்சி மற்றும் சரிவான மலைப்பகுதி என்பதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
எனினும், வன ஊழியர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினர். சில பகுதி களில் எதிர் தீ வைத்து தீ பரவுவதை தடுத்தனர். நேற்று இரவு (நேற்று முன்தினம்), தீ பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. மீண்டும் வனத்தீ ஏற்படுவதை தடுக்க, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,' என்றனர்.