/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ரைபிள் ரேஞ்ச்' மைதான பதிவை மாற்ற வலியுறுத்தல்
/
'ரைபிள் ரேஞ்ச்' மைதான பதிவை மாற்ற வலியுறுத்தல்
ADDED : மே 05, 2024 11:41 PM

கோத்தகிரி:'கோத்தகிரி ரைபிள் ரேஞ்சு மைதானம் என்ற பதிவை, சதுப்பு நிலமாக மாற்ற வேண்டும்,' என, சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோத்தகிரி அருகே உள்ள ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலத்தில், ஈர நில பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி தலைமை வகித்தார். லாங்வுட் சோலை பாதுகாப்புக்குழு மற்றும் கேர் அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்க, நீலகிரி மாவட்ட முன்னாள் தலைவர் ராஜூ பேசியதாவது:
கோத்தகிரி ரைபிள் ரேஞ் சதுப்பு நிலம், நகர மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. ஏழு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த நீர் ஆதாரத்தின் ஒரு பகுதி, 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.
அந்த நிறுவனம், சரியான முறையில் பயன்படுத்தாமல், மற்றொரு தனியாருக்கு உள்குத்தகைக்கு கொடுத்துள்ளது. இந்த நிலத்தை, கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம், 30 ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்தி, திரும்பப்பெற்றது.
அந்த சதுப்பு நிலத்தின் ஒரு பகுதி அரசு ஆவணங்களில் மைதானம் என்று பதியப்பட்டுள்ளது. அதனை சதுப்பு நிலம் என மாற்றுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், இதுவரை நடவடிக்கை இல்லை.
இந்த சதுப்பு நிலத்தை சுற்றி வேலி அமைத்து, தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீரை முறைப்படுத்த வேண்டும். அந்தப் பகுதியிலுள்ள யாரும் உரிமை கொண்டாடாத கட்டடத்தை பாதுகாப்பதுடன், தாவர இனங் இனங்களை உருவாக்கும் நர்சரி மையமாக மாற்ற வேண்டும்.
இப்பகுதியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நான்கு கிணறுகள் யாருக்கும் பயனில்லாமல் உள்ளது. அதனை துார்வாரி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இங்கு, நிறுத்தப்படும் நூற்றுக்கணக்கான தனியார் வாகனங்களுக்கு மாற்று இடம் வழங்குவதுடன், பகுதி மக்கள் இடையே, சதுப்பு நிலம் பாதுகாப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, ராஜூ பேசினார்.
இது குறித்து, கோத்தகிரி பேரூராட்சி தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
'கேர்' டிரஸ்ட் வட்டார கள அலுவலர் வினோபா, மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதிவிராஜ், 'தி கார்டன் ஆப் ஹோப் டிரஸ்ட்' அமைப்பின் நிர்வாக அலுவலர் அருண் பெள்ளி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெண்களின் பங்கு குறித்து பேசினர். திராளன மாணவியர் பங்கேற்றனர்.