ADDED : மே 14, 2026 08:03 PM
பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், மலம்புழா 1-வது வார்டு வெள்ளழுத்தாம் பொற்றையை சேர்ந்தவர் சந்திரன், 57. இவர், மலம்புழா அரசு குடும்ப சுகாதார மையத்தின் முன்னாள் ஊழியர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணியளவில், சந்திரன் தனது உறவினர்களான மாதவன், 60, மீனாட்சி, 55, ஆகியோருடன் வீட்டின் முன் உள்ள புளிய மரத்தடியில் படுத்து துாங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த காட்டு யானை, சந்திரனை தும்பிக்கையால் துாக்கி வீசியது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு கண் விழித்த மாதவன், மீனாட்சி ஆகியோர், அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓடி உயிர் தப்பினர். மக்கள் சப்தம் எழுப்பியதும் யானை வனப்பகுதிக்குள் சென்றது.
அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த சந்திரனை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரும் போலீசாரும், விசாரணை நடத்தினர்.
