ADDED : மே 16, 2024 06:11 AM

பந்தலுார் : பந்தலுார் பகுதியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் யாரும் கண்டு கொள்ளவில்லை.
பந்தலூர் பஜாரில் இருந்து மைதானத்திற்கு செல்லும் சாலையை ஒட்டி, வருவாய் துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலப் பகுதியை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன்னர் நில அளவை செய்யப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் அரசியல்வாதிகள் உதவியுடன், இந்த பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்தனர்.
இதன்பின் வரும் அதிகாரிகள் இதுகுறித்து கண்டுகொள்ளாத நிலையில், தற்போது அரசுக்கு சொந்தமான நிலம் காணாமல் போய் வருகிறது. 'இந்த பகுதியில் நகராட்சி மூலம் மார்க்கெட் மற்றும் திருமண மண்டபம் அமைக்க வேண்டும்,' என, மக்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாலை ஓரத்தில் கடை வைத்திருந்தவர்களுக்கு, இந்த பகுதியில் இடம் ஒதுக்கி தரப்பட்ட நிலையில், சிலர் கடை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பின்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ள நிலையில், குடிமகன்கள் இங்கு உள்ள சில கடைகளை பார் ஆக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இந்த வழியாக மாலை நேரங்களில் பெண்கள் மற்றும் மாணவிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
மக்கள் கூறுகையில், ' அரசு அதிகாரிகள் பாரபட்சம் இன்றி நில அளவை செய்து, ஆக்கிரமப்புகளை அகற்றி நிலத்தை கையகப்படுத்த வேண்டும். அதில், மார்க்கெட் மற்றும் திருமண மண்டபம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
அதேபோல் மாலை நேரங்களில் போலீசார் இப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்,' என்றனர்.