‘ரேடியோ காலர்’ பொருத்தப்பட்ட பாறு கழுகு மின்சாரம் தாக்கி பலி
‘ரேடியோ காலர்’ பொருத்தப்பட்ட பாறு கழுகு மின்சாரம் தாக்கி பலி
ADDED : ஜூன் 30, 2026 08:31 PM
கூடலுார்: மகாராஷ்டிராவில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு, இடம் பெயர்ந்து நீலகிரிக்கு வந்த வெண் முதுகு பாறு கழுகு மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.
மகாராஷ்டிராவில் இனப்பெருக்கத்திற்காக, அங்குள்ள இயற்கை பாதுகாப்பு சங்கம் சார்பில், வளர்க்கப்பட்ட வெண்முதுகு பாறு கழுகுக்கு, கடந்த டிச., மாதம் ரேடியோ காலர் பொருத்தி வனத்தில் விடுவித்தனர். அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
கடந்த ஏப்., மாதம் இந்த கழுகு கர்நாடக மாநிலம் கலபுரகி வனப்பகுதியில், உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் இருந்தது. கர்நாடக வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து, மீண்டும் வனப்பகுதியில் விடுவித்தனர். அங்கிருந்து முதுமலைக்கு இடம் பெயர்ந்தது.
அதற்கு ஏற்ற வாழ்விடமான சீகூர் பகுதியில் இருந்து கூடலுார், கல்லட்டி, ஊட்டி எப்பநாடு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி சென்றது. இந்நிலையில், சின்ன குன்னுார் பகுதியில் இரு தினங்களுக்கு முன், பாறு கழுகு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. வன ஊழியர்கள் அதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர்.
பறவை ஆர்வலர்கள் கூறுகையில், ‘மகாராஷ்டிராவில் இருந்து ரேடியோ கலர் பொருத்தப்பட்டு நீலகிரிக்கு வந்து, தன் வாழ்விடத்தை தேர்வு செய்ய முடியாமல் பல பகுதிகளிலும் சுற்றி வந்த, அரிய வகை பாறு கழுகு உயிரிழந்தது கவலை அளிப்பதாக உள்ளது,’ என்றனர்.
,
