ADDED : ஜூன் 05, 2026 06:40 PM

கூடலுார்: கூடலுாரில் காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் டிரான்ஸ்பார்மர் பாதிக்கப்பட்டு, மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.
கூடலுார் பகுதியில் நேற்று காலை முதல் மழை பெய்து வருது. இந்நிலையில், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை தெய்வமலை அருகே காலை, 10:00 மணிக்கு காய்ந்த மரம் ஒன்று சாய்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இரு புறமும் நிறுத்தப்பட்டன.
தீயணைப்பு துறையினர், மரத்தை அகற்றி, ஒரு மணி நேரத்தில் போக்குவரத்தை சீரமைத்தனர்.
அதேபோன்று, கூடலுார் இருந்து ஏழுமுறம் செல்லும் இணைப்பு சாலையில், ஆவின் சென்டர் அருகே காலை, 10:15 மணிக்கு மரம் விழுந்து மின் டிரான்ஸ்பார்மர் சாய்ந்தது. மின் கம்பிகள் சேதமடைந்து, மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. முன்னணி தீயணைப்பு வீரர் தாமஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மரத்தை அகற்றி, மூன்று மணி நேரத்துக்கு பின் போக்குவரத்தை சீரமைத்தனர்.
கூடலுார் உதவி செயற்பொறியாளர் ஹரி கிருஷ்ணன், மின் ஊழியர்கள், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சாய்ந்த டிரான்ஸ்பார்மரை சீரமைத்து மின் சப்ளை வழங்கினர்.
