ADDED : ஆக 02, 2026 12:20 PM
ஊட்டி : -
ஊட்டியில் வனத்துறை நிலம், 320 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று 1960ல் எச்பிஎப்., எனப்படும் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை துவங்கப்பட்டது. 1990ல் உலகமயமாக்கல் கொள்கைக்கு பின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிலிம்களின் மவுசு குறைய துவங்கியது. படிப்படியாக ஏற்றுமதி குறைந்து எச்.பி.எப்., தொழிற்சாலை நஷ்டத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு பயன்பாடின்றி மூடப்பட்டது. இத்தொழிற்சாலையில் கச்சா பிலிம் தயாரிக்க தங்கம் மற்றும் வெள்ளி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மூடப்பட்ட நிலையில் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
இந்த சூழலில் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மண் மற்றும் கட்டடத்திற்குள் வெள்ளி கிடைக்கும் என கூறப்படுவதால் சமீபகாலமாக அக்கம்பக்கத்தினர் சிலர் தொழிற்சாலை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மண்ணை கடத்துகின்றனர். அண்மையில் அத்துமீறி நுழைந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த மாதம் 15ம் தேதியன்று தொழிற்சாலை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து வெள்ளி துகள் கலந்த, 3 டன் மண் கடத்தியதாக த.வெ.க., கிளை செயலாளர் சுரேஷ் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் 40 மூட்டை மண் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன், ஜலீல், ராஜேஷ்குமார் ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.
