/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் ஆற்றை காணோம்...!முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்
/
மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் ஆற்றை காணோம்...!முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்
மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் ஆற்றை காணோம்...!முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்
மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் ஆற்றை காணோம்...!முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்
ADDED : ஜூலை 08, 2024 12:25 AM

குன்னுார்:குன்னுாரில் கிருஷ்ணாபுரம் ஆற்றில் செடிகள் முளைத்து மரம் போன்று காட்சியளிப்பதுடன், மழை காலங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டால், மார்க்கெட்டில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
குன்னுார் சுற்றுப்புற மலை பகுதிகளில் உற்பத்தியாகும் நீர் பஸ் ஸ்டாண்ட், லாஸ் பால்ஸ், காட்டேரி வழியாக பவானி ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் 'பிளாஸ்டிக்' பாட்டில்கள் உட்பட குப்பை, இறைச்சி கழிவுகள், துணி மூட்டைகள் கொட்டுவதாலும், கழிவு நீர் கலந்து விடுவதாலும் மாசடைந்துள்ளது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இந்த ஆற்றில் வெள்ளம் அதிகரித்து பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
1978ல் பெரும் சேதம்
கடந்த, 1978 நவ., 323 மி.மீ., மழை பதிவாகிய போது, மார்க்கெட்டில் வெள்ளம் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து, '1993, 2001, 2006, 2009' என, மழை பாதிப்பு ஏற்பட்டு பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், 2015ல், மார்ச் 8ல் குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த மழையின் போது, கிருஷ்ணாபுரம் பகுதியில ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில், 40 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால், பலருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இன்னும் பலருக்கு இன்ஸ்சூரன்ஸ் பணம் கூட கிடைக்கவில்லை.
பழைய பாலத்தால் பாதிப்பு
அப்போது, வருவாய் துறையினர் நடத்தி ஆய்வில், 'அப்பகுதியில் உள்ள சில தி.மு.க., நிர்வாகிகளின் வீடுகள் உட்பட பல வி.ஐ.பி.,க்களின் வீடுகளுக்கு வாகனங்கள் செல்ல, தாழ்வாக அமைக்கப்பட்ட பாலத்தின் காரணமாகவே அடைப்பு ஏற்பட்டு, வெள்ளம் செல்ல வழியில்லாமல், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. கிருஷ்ணாபுரம் பாலத்தை உயர்த்தி கட்டினால் மட்டுமே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்,' என, தெரியவந்தது.
2018ல் துார்வாரும் பணி
இதன் பிறகு, 2018ல் சமூக ஆர்வலர்களின் நிதியுதவியுடன், 'கிளீன் குன்னுார்' அமைப்பு, மாவட்ட நிர்வாகம் ஆகியவை நகராட்சியுடன் இணைந்து ஆற்றை துார்வாரி சுத்தம் செய்தன. அதில், 39 நாட்களில், 12 ஆயிரம் டன் அளவில் மண், குப்பைகள், துணி மூட்டைகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, 2019ல் நவ., 17ம் தேதி, குன்னுாரில், 14 செ.மீ.,மழை அளவு பதிவான நிலையில், ஆற்றில், 19 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. எனினும் பாலம் உயர்த்தி கட்டும் பணிக்கு மாவட்ட நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை.
மரம் போன்று வளர்ந்த செடிகள்
தற்போது, மார்க்கெட் அருகே உள்ள ஆற்றில் செடிகள் மரம் போன்று வளர்ந்து ஆற்றை முழுமையாக மூடியுள்ளது. ஒரு அடி அகலம் மட்டுமே கழிவு நீரும் ஆற்று நீரும் கலந்து செல்கிறது.
இதனால் மழை காலங்களில் முட்புதர்; குப்பையால் அடைப்பு ஏற்பட்டு மார்க்கெட்டில் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும், வி.பி., தெரு பகுதியில் இருந்து மார்க்கெட் பூகுண்டம் பகுதிக்கு செல்லும் பாலத்தின் அடியில் பல இடங்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. மழையில் இந்த பாலமும் இடிந்து விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.