/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆவணங்கள் இன்றி பீகாரில் இருந்து அழைத்து வந்த 21 சிறுவர்கள் மீட்பு
/
ஆவணங்கள் இன்றி பீகாரில் இருந்து அழைத்து வந்த 21 சிறுவர்கள் மீட்பு
ஆவணங்கள் இன்றி பீகாரில் இருந்து அழைத்து வந்த 21 சிறுவர்கள் மீட்பு
ஆவணங்கள் இன்றி பீகாரில் இருந்து அழைத்து வந்த 21 சிறுவர்கள் மீட்பு
ADDED : ஜன 13, 2026 05:26 AM
பாலக்காடு: முறையான ஆவணங்களின்றி பீகாரில் இருந்து அழைத்து வரப்பட்ட, 21 சிறுவர்களை, பாலக்காடு ரயில்வே போலீசார் மீட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு, விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரு பெரியவர்களுடன், 21 சிறுவர்கள் வந்தனர்.
நடைமேடையில் குழந்தைகளுடன் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த அவர்களிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, பீகாரின் கிஷன்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 10 -- 13 வயதுடைய சிறுவர்கள் என்பதும், முறையான ஆவணங்கள் இன்றி கோழிக்கோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் கல்வி கற்பதற்காக, குழந்தைகளை பீகாரை சேர்ந்த இருவர் அழைத்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து குழந்தைகளை நலக்குழுவிடம் ஒப்படைத்தனர்.
குழந்தைகள் நலக்குழுத் தலைவர் சேதுமாதவன் நடத்திய விசாரணையில், இரண்டு ஆண்டு கால படிப்புக்காக குழந்தைகளை அழைத்துச் செல்வதாகக் கூறிய அந்த இருவரும், கோழிக்கோட்டில் உள்ள நிறுவனத்தின் பெயரை எழுதிக் கொடுத்தனர்.
ஆனால், என்ன படிப்பு என்பதை அவர்கள் தெளிவுபடுத்தவில்லை. சிறுவர்களுக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனைத் தொடர்ந்து சிறுவர்களை குழந்தைகள் நலக்குழு மீட்டு தற்காலிகமாக பேழுங்கரையில் உள்ள மையத்திற்கு அழைத்து சென்றனர்.
இது குறித்து குழந்தைகள் நலக் குழு தலைவர் சேதுமாதவன் கூறியதாவது:
கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், சிறுவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கேரளாவில் உள்ள அனாதை இல்லங்களுக்கு போதிய குழந்தைகள் கிடைக்காததால், அண்டை மாநிலங்களில் இருந்து குழந்தைகளை அழைத்து வருவது, பாலக்காட்டில் ஏற்கனவே பதிவாகியுள்ளது. அந்த கோணத்திலும் தற்போது விசாரணை நடத்தப்படுகிறது.
கோழிக்கோட்டில் உள்ள அந்த நிறுவனத்தைப் பற்றியும் விசாரணை துவங்கப்பட்டுள்ளது. சட்டமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.
இவ்வாறு, அவர் கூறினார்.

