sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பல்லாங்குழி சாலைகளில் திகில் பயணம்; மழைக்காலங்களில் கரணம் தப்பினால் மரணம்

/

பல்லாங்குழி சாலைகளில் திகில் பயணம்; மழைக்காலங்களில் கரணம் தப்பினால் மரணம்

பல்லாங்குழி சாலைகளில் திகில் பயணம்; மழைக்காலங்களில் கரணம் தப்பினால் மரணம்

பல்லாங்குழி சாலைகளில் திகில் பயணம்; மழைக்காலங்களில் கரணம் தப்பினால் மரணம்

1


ADDED : மே 07, 2025 11:46 PM

Google News

ADDED : மே 07, 2025 11:46 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலகிரி மலை மாவட்டத்தில், ஒவ்வொரு ஐந்தாண்டு இடைவெளியில், பர்லியார் முதல் கக்கனல்லா வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் வரும் பல சாலைகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும், இங்கு தொடரும் மழை காரணமாக, சாலைகள் விரைவில் சேதமடைந்து வருகின்றன.

மறுபுறம், இம்மாவட்டத்தின் பெருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தேயிலை மற்றும் காய்கறி தோட்டம் அதிகம் உள்ள கிராமப்புறங்களின் சாலைகளில், பெரும்பாலானவை வாகனங்கள் செல்வதற்கு தகுதியற்றவைகளாக மாறி உள்ளன.

இதனால், சிறுவிவசாயிகள், தங்களின் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

கடந்த, 2014ம் ஆண்டு முதல், 'கிராம சதக் யோஜ்னா' திட்டத்தின் கீழ், மலை கிராம சாலைகள் மேம்பாட்டுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. எனினும், பழங்குடியினர், சிறு விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் வாழும் பல கிராம சாலைகள் சீரமைக்கப்படாமல் மிகவும் மோசமாக காணப்படுகின்றன.

'பழங்குடியின கிராமங்களுக்கு செல்லும் சாலைகளை சீரமைக்க எந்த தடையும் விதிக்க கூடாது,' என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ள நிலையிலும், இதுவரை சாலையை பார்க்காத பழங்குடியின கிராமங்கள் தற்போதும் உள்ளன.

சீரமைக்காத செங்குத்தான சாலைகள்


மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ், 'முக்கிய சாலைகள்; இதர மாவட்ட சாலைகள்,' என்ற பிரிவுகளின் கீழ் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில், முக்கிய சாலைகள், 905 உள்ளன.

அதில், ஊட்டி, குந்தா, குன்னுார், பந்தலுார், கூடலுார், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் கிராமப்புற சாலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் அதிக அளவில் வாகன போக்குவரத்து உள்ள நிலையில், இத்தகைய சாலைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் சீரமைப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை.

இங்கு பெரும்பாலான கிராமப்பகுதிகளில், செங்குத்தான மற்றும் கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட சாலைகள் பல உள்ள நிலையில், இவற்றை முறையாக பராமரிக்காததால், மக்கள் நாள்தோறும் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக, குன்னுார், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் வனப்பகுதி சாலைகளை கடந்து பல்வேறு கிராமங்களுக்கும் செல்ல வேண்டிய சூழலில், வன சட்டங்களை மேற்கோள்காட்டி, சாலைகளை சீரமைக்க வனத்துறை அனுமதி மறுக்கிறது.

இதனால், பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகளில் கற்கள் பெயர்ந்து குழிகளாக மாறி, வாகனங்களும் சென்று வர முடியாத சூழல் உள்ளது. பல கிராமங்களுக்கு மக்கள், இணைப்பு சாலைகளில் இருந்து, ஐந்து முதல் ஏழு கி.மீ., துாரம் வரை நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இரு மாநில இணைப்பு சாலைகளும் மோசம்


கூடலுார் -மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஊசிமலை, -தொரப்பள்ளி இடைப்பட்ட, 16 கி.மீ., துாரமுள்ள சாலை மூன்று ஆண்டுகளாக சேதம் அடைந்து வருகிறது. இதனை நிரந்தரமாக சீரமைக்க எந்த நடவடிக்கையும் இல்லை.

அதே போன்று, தமிழகம்- கேரளாவை இணைக்கும் நாடுகாணி முதல் மாநில எல்லையான கீழ்நாடுகாணி வரையிலான, 6 கி.மீ., தூரம் உள்ள சாலை வாகன போக்குவரத்துக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வழியாக நீலகிரிக்குள் நுழையும் வாகனங்களுக்கு, நாடுகாணியில் நுழைவு வரி வசூல் மையத்தில், நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். எனினும், சாலையை நிரந்தரமாக சீரமைக்க எந்த நடவடிக்கையும் இல்லை.

கூடலுார் தேவர்சோலை அருகே, புலம்பட்டி மட்டம் இடையேயான சாலை, மிக மோசமான நிலையில் சேதம் அடைந்துள்ளது. இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், பருவமழையின் போது இவ்வழியாக இயக்கப்படும் அரசு பஸ் நிறுத்தப்படும் ஆபத்து உள்ளது. இது போன்ற பல கிராம சாலைகள் சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது.

இதேபோல, கேத்தி முட்டிநாடு அருகே கோலனிமட்டம் சாலை, கோடை காலத்திலும் சேறு நிறைந்து வயல்வெளி போன்று உள்ளது. குன்னுார் ஜெகதளா பகுதியில் பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், கோத்தகிரி தாலுகா அலுவலக சாலை, பில்லி கொம்பை சாலை, ஒன்னதலை கோவில் மேடு இணைப்பு சாலைகள் மிகவும் சேதமடைந்தும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை.

தேர்தல் சமயத்தில் வரும் அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். ஆட்சியில் அமர்ந்தவுடன் காணாமல் போய்விடுகின்றனர் சாலைகளை போலவே!

நடவடிக்கை எடுக்கவில்லை


சுப்ரமணியம், உதவி கோட்ட பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை: மாவட்டத்தில் முக்கிய நெடுஞ்சாலைகளில் இருந்து, கிராமங்களை இணைக்கும் சாலைகள் பல, மிக குறுகலாக உள்ள நிலையில் இவற்றை, அகலப்படுத்தவோ, சீரமைக்கவோ எந்த நடவடிக்கையும் இதுவரை துறை சார்ந்து எடுக்கவில்லை.



கோடை காலத்திலும் 'வயல் வழி'


ஹரிஹரன், தன்னார்வலர், கேத்தி: குன்னுார் சுற்றுப்புற பகுதியில், உழைக்கும் ஏழை தொழிலாளிகள் உள்ள கிராமங்களில், சாலை உட்பட அடிப்படை வசதிகள் நிறைவேற்றாமல் அரசு அதிகாரிகள் புறக்கணித்து வருவதால், மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில், முட்டிநாடு அருகே கோலனிமட்டம் சாலை, கோடை காலத்திலும் சேறு நிறைந்து வயல்வெளி போன்று உள்ளது. அரசின் கடமையை செய்ய தவறியதால், மக்களின் கோரிக்கைகள் புகார் மனுவாக, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும், அதிகாரிகள் அலட்சிய போக்குடன் செயல்படுவதால், அடிப்படை வசதிகள் நிறைவேற்ற முடியாத நிலை தொடர்கிறது.



பருமழை காலத்தில் சிக்கல் அதிகரிக்கும்


டென்னி, சமூக ஆர்வலர், கூடலுார்: கூடலுாரில் சேதமடைந்துள்ள நாடுகாணி - கீழ்நாடுகாணி மாநில சாலை, ஊசிமலை -தொரப்பள்ளி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை, அதிகாரிகள் பலமுறை ஆய்வு செய்து சென்றுள்ளனர். ஆனால், சாலையை நிரந்தரமாக சீரமைக்க, அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முக்கிய சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள செடிகள் அகற்ற கூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், பருவமழை காலத்தில், சாலைகள் மேலும், சேதமடைவதுடன், வாகன விபத்துகள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது,'



அவசர காலங்களில் அவஸ்தை


உஸ்மான், சமூக ஆர்வலர், நெலாக்கோட்டை: கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலைகள், கேரளா மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலைகளாக உள்ளன. இந்த வழியாக அதிக அளவில் டிப்பர் லாரிகள் மற்றும் கனரா வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், குறுகலான சாலையில் அவசர தேவைகளுக்கு மருத்துவ மனைகளுக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாதது மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இது போன்ற சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் முன் வரவேண்டும்.



கிராம சாலைகள் படுமோசம்


சுரேஷ், சமூக ஆர்வலர், ஒரசோலை கோத்தகிரி: கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், நெடுஞ்சாலை துறை சார்பில், நகர சாலைகள் மிகவும் நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகள் மோசமாக காணப்படுகின்றன. குறிப்பாக, ஒன்னதலை -கோவில்மேடு, பில்லிக்கம்பை, கட்டபெட்டு, -குன்னுார் பிரதான சாலையில் இருந்து, பஜாருக்கு செல்லும் சாலை, ஒரசோலை சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. பள்ளி வாகனங்கள் உட்பட, ஏராளமான வாகனம் இயக்கம் இருந்தும் பல ஆண்டுகளாக சீரமைக்க படாமல் இருப்பது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



-நிருபர் குழு-






      Dinamalar
      Follow us