ADDED : ஆக 13, 2026 07:33 PM
பாலக்காடு: மலம்புழா பூங்காவை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து தாமதமாவதை கண்டித்து, பா.ஜ. சார்பில் பேரணி நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பா.ஜ., மலம்புழா தொகுதி கமிட்டி சார்பில் பூங்காவை நோக்கி பேரணி நடந்தது. நீண்ட நாட்களாகப் பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கும் பூங்கா வளாகத்திற்குள், பசுக்களை மேய்த்து பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மகளிர் அணியினர் கூடை மற்றும் அரிவாளுடன் களமிறங்கி, பூங்காவிற்குள் வளர்ந்துள்ள புற்களை அறுத்து நுாதன கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜ., மலம்புழா தொகுதி தலைவர் சுஜித் தலைமையில் நடந்த போராட்டத்தை, கட்சியின் மாநில துணைத் தலைவர் கிருஷ்ணகுமார் துவக்கி வைத்து பேசுகையில், ‘மலம்புழா பூங்கா சீரமைப்பு பணிகள் முற்றிலுமாக முடங்கி கிடப்பதற்கு, மலம்புழா எம்.எல்.ஏ.,வும், கேரள மாநில அரசுமே முழு காரணமாகும்,’ என்றார்.
கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகன், மாநில குழு உறுப்பினர் உண்ணிகிருஷ்ண வர்மா, தொகுதி பொதுச்செயலாளர்கள் விபின், ஜோதிஷ், துணைத் தலைவர் சுப்ரமணியன், செயலாளர் சுதீர், யுவமோர்ச்சா மாவட்ட செயலாளர் மாதவதாஸ், ஊராட்சி குழுத் தலைவர் பிரவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
