/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' கட்டண சர்ச்சை: சுற்றறிக்கையால் எழுந்த குழப்பம்
/
பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' கட்டண சர்ச்சை: சுற்றறிக்கையால் எழுந்த குழப்பம்
பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' கட்டண சர்ச்சை: சுற்றறிக்கையால் எழுந்த குழப்பம்
பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' கட்டண சர்ச்சை: சுற்றறிக்கையால் எழுந்த குழப்பம்
ADDED : ஜன 12, 2024 11:29 PM
குன்னுார்;'நீலகிரி அரசு பஸ்களில் தொடரும் 'எக்ஸ்பிரஸ்' கட்டண பிரச்னைக்கு தீர்வு காணாமல், கூடுதல் வசூல் புகார் வந்தால், கண்டக்டர் மற்றும் கிளை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என, வெளியிட்ட சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரியில் இருந்து, உள்ளூர் மற்றும் சமவெளி பகுதிகளுக்கு, 349 வழித்தடங்களில் இயங்கும் பஸ்கள், சாதாரண கட்டணத்தில் மட்டுமே இயக்க வட்டார போக்குவரத்து அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
அதில், '25 கி.மீ.,க்கு ஒரு ஸ்டேஜ் கொண்ட, 80 கி.மீ.,க்கான அரசு ஆணை, நீலகிரிக்கு பொருந்தாது' என, கூறப்பட்ட நிலையில், அரசு போக்குவரத்து கழகம் தன்னிச்சையாக 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் மக்களிடம் வசூலிப்பது நீடிக்கிறது.
இது தொடர்பாக, நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளிலும் போக்குவரத்து கழகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'போக்குவரத்து கழக வணிக பிரிவு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்; கூடுதலாக வசூலிப்பதாக புகார் வந்தால் கண்டக்டர் மற்றும் கிளை மேலாளர் மீதுநடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழப்பமான சுற்றறிக்கை :
இது தொடர்பாக, லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறியதாவது:
நீலகிரியில் வட்டார போக்குவரத்து அலுவலக ஆணைக்கு ஏற்ப அனைத்து பஸ்களிலும் சாதாரண கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், 'எக்ஸ்பிரஸ்' பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்படவில்லை என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எழுத்துப்பூர்வமாக தெரிவிதுள்ளார்.
இந்த உத்தரவை மீறும், அரசு போக்குவரத்து கழகம், மக்களை ஏமாற்றி, 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூலிக்கிறது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் வட்டார போக்குவரத்து குழு, பஸ் கட்டணத்தை நிர்ணயிக்கும் நிலையில், மேலாண்மை இயக்குனர் தனது சுற்றறிக்கையில், 'போக்குவரத்து கழக வணிகப்பிரிவு நிர்ணயத்துள்ள கட்டணம்,' என, குறிப்பிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனோகரன் கூறினார்.