2 கிலோ கஞ்சா பறிமுதல்-ஒருவர் கைது
தமிழக, கேரளா எல்லையான ஆனைகட்டி சோதனை சாவடியில் தடாகம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பபித்ரா காரட்,19, நபரை தடுத்து நிறுத்தி, அவரை சோதனை செய்தனர்.
அவர், 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, இரண்டு கிலோ எடையுள்ள கஞ்சா விற்பனைக்கு வைத்து இருந்தது தெரியவந்தது. தடாகம் போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
நகை, பணம் திருட்டு
துடியலூர் அருகே உள்ள கவுண்டர் மில்ஸ், கே.கே. நகர், மூன்றாவது வீதியில் வசிப்பவர் நந்தகுமார்,40. இன்ஜினியர். இவர் நல்லாம்பாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று, ஓய்வு எடுத்த பின்னர், நேற்று முன்தினம் கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.
வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்த போது, வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி இருந்தது. அறைக்குள் பீரோ திறந்து கிடந்தது.
பீரோவில் இருந்த மோதிரம், கம்மல், கொலுசு, வெள்ளி விளக்கு, கை கடிகாரம், 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியன காணாமல் போய் இருந்தது. சம்பவ இடத்தில் துடியலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
அங்கிருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

