
பேக்கரிக்குள் புகுந்த பைக் : வாலிபர் காயம்
மேட்டுப்பாளையம் அறிவொளி நகரை சேர்ந்தவர் பரக்கத்துல்லா, 20. நேற்று முன்தினம் இவர் தனது பைக்கில் அதிவேகமாக மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செல்லும் வழியில், தனக்கு முன்னால் சென்ற பைக்கின் மீது இவர் மோதினார். இதில் நிலை தடுமாறி, அருகில் உள்ள பேக்கரிக்குள் பைக் நுழைந்தது. இதில் பரக்கத்துல்லா பலத்த காயமடைந்தார். பின் அருகில் உள்ளவர்கள் மீட்டு அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேக்கரியில் உள்ளவர்கள், சுதாரித்து கொண்டு எழுந்ததால் அவர்கள் யாருக்கும் அடி படவில்லை.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
--- வாலிபருக்கு வெட்டு : 4 பேர் கைது
மேட்டுப்பாளையம் கரட்டு மேடு பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன், 29. கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இவர் பணி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் தனது நண்பரின் வீட்டின் முன்பு, அவரது குழந்தையுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த திலீப், 19, பைக்கில் வேகமாக வந்து ராமசந்திரன் மற்றும் குழந்தையின் மீது மோதுவது போல் பைக்கை இயக்கினார். இதனால் கோபமடைந்த ராமசந்திரன், திலீப்பை திட்டினார். பின் இருவரிடையே வாய் தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவர்களை விலக்கிவிட்டனர்.
இதனிடையே ராமசந்திரன் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றார். அங்கு திலீப் தனது நண்பர்களான கெளரிசங்கர், 21, மோகன்குமார், 18 மற்றும் திவ்யா ராஜன், 19 ஆகியோருடன் சென்று ராமசந்திரனை தாக்கினர். மேலும் திலீப் தான் வைத்திருந்த பட்டா கத்தியால் ராமச்சந்திரனை வெட்டியதில் அவரது கை மற்றும் கால்களில் காயமடைந்தன. அருகில் இருந்தவர்கள் ராமசந்திரனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, திலீப், மோகன்குமார், கெளரிசங்கர் மற்றும் திவ்யா ராஜன் ஆகியோரை கைது செய்தனர்.
------விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்த கார்
சூலூர் அருகே அதிகாலை நடந்த விபத்தில், சொகுசு கார் தீப்பிடித்து எரிந்தது. கோவை பொன்னைய ராஜபுரத்தை சேர்ந்தவர் திலீப், 32. நகை உற்பத்தியாளர். இவர் தனது காரில், நண்பர் சிவராமன் என்பவருடன் சென்னை சென்று விட்டு நேற்று கோவை திரும்பி கொண்டிருந்தார். அதிகாலை, 4:00 மணிக்கு, அவிநாசி ரோட்டில் நீலம்பூர் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், ரோட்டில் உள்ள டிவைடரில் மோதி, கவிழ்ந்தது. கவிழ்ந்த வேகத்தில் கார் தீப்பிடித்து எரிய துவங்கியது.
அங்கு விரைந்த ரோந்து போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த சூலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். காரில் வந்த இருவரும் காயமடைந்ததால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சூலூர் போலீசார் விசாரித்து வந்தனர்.

