மலை மாவட்டத்தில் கலப்பு காய்கறி உற்பத்தி பாதிக்கும் அபாயம்!: பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் கவலை
மலை மாவட்டத்தில் கலப்பு காய்கறி உற்பத்தி பாதிக்கும் அபாயம்!: பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் கவலை
UPDATED : ஜூன் 19, 2026 05:10 PM
ADDED : ஜூன் 18, 2026 06:31 PM

ஊட்டி: நீலகிரியில் மாவட்டத்தில் எதிர்பார்த்த பருவமழை பெய்யாததால் மலை காய்கறி உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக, 25 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறி விவசாயமும், 5,000 ஏக்கரில் தேயிலை தோட்டம் நடுவே ஊடு பயிராக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் மூன்றாம் போகம் விவசாயம் பிப்., மார்ச் மாதங்களில் தொடங்கி மே , ஜூன் மாதங்களில் அறுவடை செய்யப்படும் சூழல் இருந்தது. கோடை மழையை நம்பி விவசாயிகள் விதைப்பு பணிகளை மேற்கொண்டனர். கோடை மழை பொய்த்த காரணத்தினால் பெரும்பாலான விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.
அதன் பின், முதல் போகம் விவசாயம் ஏப்., மே மாதங்களில் தொடங்கி ஆக ., செப் ., மாதங்களில் அறுவடை செய்யப்பட வேண்டும். தற்போதும், எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. விதைப்பு பணி மேற்கொண்ட விவசாயிகள் இடுப் பொருட்கள் செலவினத்தை தாக்குப் பிடிக்க முடியாமலும், சில பகுதிகளில் முளைப்பு திறன் இல்லாமலேயே பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் கவலை அடைந்துள்ளனர்.
குறிப்பாக, ஊட்டி அருகே கேத்தி பாலாடா, கொல்லிமலை ஓரநள்ளி , கூக்கல் தொரை , குளிச்சோலை , முத்தோரை பாலாடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் மலை காய்கறிகளுடன் , வெளிநாட்டு ஏற்றுமதி செய்யப்படும், சைனீஸ் ரக மலை காய்கறிகளை சேர்த்து, கலப்பு முறை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு, போதிய மழை இல்லாததால், 2000 ஏக்கர் பரப்பில் காய்கறி விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
நிவாரணம் வேண்டும் விவசாயிகள் கூறுகையில், 'நீலகிரியில் சமீபகாலமாக மாறுபட்ட கால நிலை நிலவுவதால், பருவ மழை குறிப்பிட்ட காலத்தில் பெய்வதில்லை. சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டம் அடைந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தோட்டக்கலைத் துறையினர் அந்தந்த வட்டங்களில் விவசாயிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி தேவையான விழிப்புணர்வைஏற்படுத்த வேண்டும்.பயிர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரண வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்
தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தில் விவசாயிகள் மத்தியில் அவ்வப்போது விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரைகளை வழங்கி வருகிறோம். கடந்த இரண்டு பருவங்களில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
