/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்பு
/
ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்பு
ADDED : அக் 01, 2025 11:46 PM
-நிருபர் குழு-
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை சிறப்பாக நடந்தது.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், நாட்டில் தொழிலில் வளர்ச்சி அடையவும், ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை செய்து வழிப்படுவது வழக்கம். நேற்று நடந்த சரஸ்வதி பூஜையையொட்டி, மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ஊட்டியில், மாரியம்மன் கோவில், மூலகரசியம்மன் கோவில், பெருமாள் கோவில், அன்னமலை முருகன் கோவில் உட்பட பல கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆயுத பூஜை அமர்க்களம் வீடுகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. 'தொழில் உபகரணங்கள், ஆயுதங்கள், வாகனங்கள், புத்தகங்கள், இசைக்கருவிகள்,' என, தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து, மலர்கள், சந்தனம், வஸ்திரம் ஆகியவற்றால் அலங்கரித்து பூஜை செய்தனர். கல்வி நிறுவனங்களில் புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழை இலையில் படையலிட்டனர்.
சர்க்கரை பொங்கல், சுண்டல், அவல், பொரி, கடலை மற்றும் பழங்களை நைவேத்தியங்களாக படைத்து வழிபட்டனர்.
இததேபோல, விஜயதசமி என்ற வெற்றி திருவிழாவுடன் நவராத்திரி விழா நிறைவுபெறுகிறது. நவராத்திரி முடிந்து பத்தாவது நாளில் அம்பிகை மகிஷாசூரனை சம்ஹாரம் செய்து வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதன் வாயிலாக அந்த குழந்தை கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது மக்களின் நம்பிக்கையாகும். இதனையொட்டி, இன்று பல்வேறு கோவில்களிலும் 'வித்யாரம்பம்' நடக்க உள்ளது.
பந்தலுார் பந்தலுார் அருகே பொன்னானி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் நடந்த பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர். பூஜைகளை அர்ச்சகர் சண்முகம் தலைமையிலான குழுவினர் செய்தனர்.
உப்பட்டி ஸ்ரீ செந்துார் முருகன் கோவிலில் கொலு வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
பூஜைகளை அர்ச்சகர் சுந்தர்ராஜ் தலைமையிலான குழுவினரும், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா மூர்த்தி, தலைவர் செந்தில் வேல் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
-பந்தலுார் முத்துார்பிள்ளை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, வாகனங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. பொன்னானி மகாவிஷ்ணு கோவிலில் வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
-குன்னுார் குன்னுார் மக்கள் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் நடந்த நவராத்திரி விழாவில் கொலு வைத்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு நாளும் அம்மன், துர்கை, சரஸ்வதி, மகாலட்சுமி உட்பட பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலித்தனர்.
குன்னுார் ஆழ்வார் பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில், தினமும் நவராத்திரி சிறப்பு அலங்காரம், வழிபாடுகள் நடந்தது. அருவங்காடு விநாயகர் கோவில், மவுன்ட் பிளசன்ட் சித்தி விநாயகர் கோவில்களில் கொலு வைத்து, வழிபாடுகள், பஜனை உள்ளிட்டவை நடந்தது.
இதேபோல, மவுன்ட் பிளசன்ட் பத்ரகாளியம்மன் கோவில், உட்பட பல்வேறு கோவில்களில் நவராத்திரி விழா, சரஸ்வதி பூஜைகள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கூடலுார் கூடலுார் விநாயகர் கோவில், புத்துார்வயல் மாதேஸ்வரன் கோவில், கலிங்கரை சிவன் கோவில், நம்பாலகோட்டை வேட்டைகொருமகன் கோவில், தேவர் சோலை சிவசங்கரன் கோவில் மற்றும் கிராம கோவில்களில் நேற்று, காலை சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாணவர்கள் தங்கள் படிக்கும் புத்தகங்களை கோவிலுக்கு எடுத்து சென்று வைத்து பூஜை செய்தனர். வாகன ஓட்டுனர்கள், வாகனங்களுக்கு மாலை அணிவித்து கோவிலுக்கு எடுத்து சென்று பூஜை செய்து எடுத்து வந்தனர். கூடலுார் நகரில், ஆட்டோ ஸ்டேன்ட் களை ஆட்டோ ஓட்டுனர்கள் அலங்கரித்து, ஆட்டோக்களுக்கு மாலை அணிவித்து, பூஜை செய்து ஆயுத பூஜையை கொண்டாடினர்.