ADDED : ஏப் 22, 2025 07:11 AM
கூடலுார்; மசினகுடி பொக்காபுரம் சாலையில் வந்த ஸ்கூட்டரை காட்டு யானை தட்டி விட்டு, பெண்ணை தாக்கியது.
நீலகிரி மாவட்டம், மசினகுடியை சேர்ந்தவர் குமாரசாமி. இவர் மனைவி சரசு,58. இவர், தபால் துறையில் தற்காலிகமாக வேலை செய்து வருகிறார்.
இவர்கள் இருவரும் நேற்று மாலை பொக்காபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு, ஸ்கூட்டரில் மசினகுடி திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, திடீரென சாலைக்கு வந்த காட்டு யானை, இவர்கள் வந்த ஸ்கூட்டரை துதிக்கையால் தட்டி உள்ளது.
அப்போது, ஸ்கூட்டரை சாலையில் போட்டு விட்டு, இருவரும் தப்பி ஓடினர். அவர்களை துரத்தி சென்ற யானை, சரசை தாக்கி விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. அதில், காயமடைந்த சரசுக்கு, மசினகுடி ஆரம்ப சுகாதார நிலைத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக, மசினகுடி வனச்சரகர் பாலாஜி வன ஊழியர்கள் விசாரித்து, கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
