ADDED : பிப் 28, 2024 09:57 PM

அன்னுார் : தேசிய பால்வள மேம்பாட்டு திட்டத்தில், ஆவின் நிறுவனம் சார்பில், பால் உற்பத்தியாளர்களுக்கு அன்னுாரில், வெள்ளிவிழா மண்டபத்தில் நேற்று பயிற்சி வகுப்பு நடந்தது.
கால்நடை மருத்துவர் ஆறுமுகம் பேசியதாவது:
சராசரியாக, 250 கிலோ எடை உள்ள கறவை மாடு, தினமும் மூன்று லிட்டர் பால் கறந்தால், ஒரு கிலோ அடர் தீவனம், 30 கிலோ பசுந்தீவனம் தர வேண்டும். கன்றின் ஒரு மாத காலம் வரை அதனுடைய எடையில், பத்தில் ஒரு பங்கு அளவு பால் கொடுத்து வர வேண்டும்.
கன்றுக்கு, ஒரு வருடம் வரை, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்து தரவேண்டும். பின், ஆறு மாதத்துக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்து தர வேண்டும்.
கன்றுக்கு மூன்று மாதம் ஆன பின், பால் தருவதை குறைத்துக் கொண்டு கலப்பு தீவனம் வழங்கலாம். பசுக்களை 18 மாதங்களுக்கு பின்னரும், எருமைகளை 24 மாதங்களுக்கு பின்னரும் செயற்கை முறையில் கருவூட்டம் செய்யலாம்.
உலகில், பால் உற்பத்தியில் நம் நாடு முதலிடம் வகிக்கிறது. யூரியாவால் செறிவூட்டப்பட்ட வைக்கோலை தீவனமாக பயன்படுத்தினால், அடர் தீவனத்தின் தேவை 30 சதவீதம் வரை குறையும். பால் கறக்கும் முன் காம்புகளை, பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலில் கழுவிய பின், உலர்ந்த துணியில் துடைத்து அதன் பின் பால் கறக்க வேண்டும். இவ்வாறு, ஆறுமுகம் பேசினார்.
ஆவின் அலுவலர்கள் பேசுகையில், 'ஆவின் சார்பில் கறவை மாடு வாங்க கடன் வழங்கப்படுகிறது. பாலுக்கான தொகை பத்து நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. சங்கம் ஈட்டிய லாபத்தில் போனஸ் உடனுக்குடன் வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது' என்றனர்.
கால்நடை டாக்டர்கள் சிவக்குமார், இளங்கோவன், முதுநிலை ஆய்வாளர் கார்த்திகா, சங்க செயலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.

