/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கட்டணமில்லா ரசீது: பயணம் நேரம் கண்காணிப்பு
/
கட்டணமில்லா ரசீது: பயணம் நேரம் கண்காணிப்பு
ADDED : மார் 14, 2024 11:48 PM

கூடலுார்:முதுமலை வழியாக இரவில் இயக்கப்படும் வாகனங்களுக்கு கட்டணமில்லாத ரசீது வழங்கி, பயண நேரத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகம், மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், இரவு, 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை வாகன போக்குவரத்துக்கு பல ஆண்டுகளாக தடையுள்ளது. இச்சாலையில், இரவு நேரத்தில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் வன விலங்குகளின் அருகில் வாகனங்கள் நிறுத்தி, அவைகளுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கவும், போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன ஓட்டுனர்களின் சிரமத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, முதுமலை நுழைவு வாயிலான தொரப்பள்ளி, கக்கனல்லா வன சோதனை சாவடிகளில், மாலை, 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை இயக்கப்படும் வாகனங்களுக்கு மட்டும் வனத்துறை சார்பில், கட்டணமில்லா நுழைவு ரசீது வழங்கப்படுகிறது.
சோதனை சாவடிகளுக்கு இடைப்பட்ட துாரத்தை, 45 நிமிடத்தில் கடக்க ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயண நேரம் கூடுதலாக இருந்தால், ஓட்டுனர்கள் அதற்கான காரணத்தை சோதனை சாவடியில் தெரிவிக்க வேண்டும்.
வனத்துறையினர் கூறுகையில், 'சோதனை சாவடிகள் இடையே, 45 நிமிடத்துக்குள் வாகனங்கள் இயக்க, ஓட்டுனர்களிடம் அறிவுறுத்தி வருகிறோம். இதனை பலரும் பின்பற்றி வாகனங்களை இயக்கி வருவதல், இரவில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

