ADDED : ஆக 17, 2026 07:02 PM
குன்னுார்: ஊட்டி பூண்டு விளைச்சல் குறைந்துள்ள நிலையில், விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
குன்னுாரில் போதுமான மழை பெய்யாததால் மலை தோட்ட காய்கறிகள் பாதித்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பல்வேறு தோட்ட காய்கறிகள் பயிரிடப்படுகிறது. நடப்பாண்டு போதுமான மழை பெய்யாததால் மலை தோட்ட காய்கறி செடிகள் காய்ந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஊட்டி பூண்டு செடிகள் காய்ந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அதில்,குன்னுாரில் பந்துமை, இளித்தொரை உட்பட மலை அடிவார பகுதிகளில் மழை இல்லாததால் பூண்டு செடிகள் காய்ந்துள்ளன.
விவசாயி பிரகாஷ் கூறுகையில்,‘‘அதிக அளவில் விலை கொடுத்து விதைகள், உரங்கள் வாங்கி பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிர் செய்தபோதும், தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான விலையை குறைக்க அரசு முன்வருவதுடன் நஷ்டங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மழையில்லாமல் பல இடங்களிலும் விவசாய பயிர்கள் மகசூல் பாதித்துள்ளதால் தான், பூண்டுக்கு விலையேற்றம் உள்ளது,’’ என்றார்.
