/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதுப்பாளையம் தடுப்பணைக்கு நல்ல காலம்! தூர்வாரும் பணிகள் துவக்கம்
/
புதுப்பாளையம் தடுப்பணைக்கு நல்ல காலம்! தூர்வாரும் பணிகள் துவக்கம்
புதுப்பாளையம் தடுப்பணைக்கு நல்ல காலம்! தூர்வாரும் பணிகள் துவக்கம்
புதுப்பாளையம் தடுப்பணைக்கு நல்ல காலம்! தூர்வாரும் பணிகள் துவக்கம்
ADDED : பிப் 07, 2024 11:16 PM

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்பாளையம் தடுப்பணையை, 'கவுசிகா நீர் கரங்கள் புதுப்பாளையம் தடுப்பணை பாதுகாப்பு அமைப்பு' சார்பில், சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.
நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள கதிர் நாயக்கன்பாளையம், சி.ஆர்.பி.எப்., பூச்சியூர், ராவுத்துக் கொல்லனூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர், பல்வேறு குடியிருப்புகள் வழியாக புதுப்பாளையம் தடுப்பணையை வந்தடைகிறது.
தடுப்பணையில் தேங்கும் நீரால், மணியகாரம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், இடிகரை, ராக்கிபாளையம், வெற்றிலை காளிபாளையம், என்.ஜி.ஜி.ஓ., காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் பெருகியது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் மழை நீரோடு, இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் கலந்தன. இதனால், புதுப்பாளையம் தடுப்பணை நீர் மாசடைந்து, குப்பை கூளமாக மாறி, தடுப்பணை முழுவதும் பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. புதுப்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்புற சூழல் பாதித்து, நிலத்தடி நீரும் கெட்டுப் போகும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, கவுசிகா நீர் கரங்கள், புதுப்பாளையம் தடுப்பணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பு புதுப்பாளையம் தடுப்பணை முன்புறமுள்ள குப்பைகளை அகற்றி, சுத்தப்படுத்தி, மரக்கன்றுகள் நட்டன.
தடுப்பணையிலிருந்து ராக்கிபாளையம் செல்லும் பாதையில், கரையோர குப்பைகளையும், தேவையற்ற மரம், செடி, கொடிகளையும், மண் அள்ளும் இயந்திரம் வாயிலாக சுத்தப்படுத்தியது. எஸ்.என்.எஸ்., கே.ஜி., பி.பி.ஜி., கல்லூரி மாணவ, மாணவியர், பூமி அமைப்பினர், இன்ட்ராக்ட் அமைப்பினர், காவல் துறை அதிகாரிகள், பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பூமி அமைப்புடன் இணைந்து விதைப்பந்து தயாரிக்கப்பட்டது. தற்போது, புதுப்பாளையத்தில் உள்ள தடுப்பணையில் தேங்கி நிற்கும் கழிவு நீரை, நல்ல நீராக்கி கரைகளை பலப்படுத்தி, தடுப்பணையை சீரமைக்கும் நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.

