அரசு மருத்துவ கல்லுாரி கட்டுமான பணி: தொழில்நுட்ப சிக்கல் தீர்க்க நடவடிக்கை
அரசு மருத்துவ கல்லுாரி கட்டுமான பணி: தொழில்நுட்ப சிக்கல் தீர்க்க நடவடிக்கை
UPDATED : ஜூன் 16, 2026 05:57 PM
ADDED : ஜூன் 16, 2026 05:51 PM

பாலக்காடு: பாலக்காடு பழங்குடியினர் நல துறையின் கீழ் செயல்படும், பாலக்காடு அரசு மருத்துவ கல்லுாரியின் கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில், தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு காண, எம்.பி., ஸ்ரீகண்டன் தலைமையில் உயர் அதிகாரிகள் குழு அவசர கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் சுதீர், மருத்துவ கல்லுாரி இயக்குனர் மணி உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு பணியின் தற்போதைய நிலை குறித்தும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு பின், உயர் அதிகாரிகள் குழு பணிகளை ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'கட்டுமான பணிகள் தொய்வின்றி நடப்பதற்காக, பொதுப்பணித்துறையின் பல்வேறு அலுவலகங்களில் உள்ள கோப்புகள் அனைத்தும் உடனடியாக மருத்துவ கல்லூரிக்கு கொண்டு வரப்படும். தொழில்நுட்ப குழு இந்த கோப்புகளை விரிவாக பரிசீலித்து, பணிகளை முடிக்க தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும். மேலும், ஒவ்வொரு குறிப்பிட்ட பணியையும் எவ்வளவு நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்பதற்கான காலக்கெடுவும் இக்கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.
