யானை பிரச்னைக்கு தீர்வு காண கடையடைப்பு :வியாபாரிகளிடம் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை
யானை பிரச்னைக்கு தீர்வு காண கடையடைப்பு :வியாபாரிகளிடம் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை
UPDATED : ஜூன் 04, 2026 08:19 PM
ADDED : ஜூன் 04, 2026 07:52 PM

பந்தலுார்: பந்தலுார் அருகே பிதர்காடு பகுதி நெடுஞ்சாலையில் நடந்து சென்றவரை யானை தாக்கியத்தில் உயிரிழந்தார்.
பந்தலுார் அருகே பிதர்காடு ஓடோட வயல் பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன்,52. இவர்,2-ம் தேதி இரவு வீட்டிற்கு நடந்து செல்லும் போது, கைவட்டா என்ற இடத்தில் யானை தாக்கியதில் படுகாயமடைந்தார். மருத்துவனையில் சிகிச்சை பலனிக்காமல் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இந்நிலையில், நேற்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, தொடரும் யானை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தினர். கூடலுார் எம்.எல்.ஏ., திராவிடமணி தலைமையில், ஆர்.டி.ஓ., குணசேகரன், உதவி வன பாதுகாவலர் சீனிவாசன், டி.எஸ்.பி.க்கள் கல்யாணகுமார், வசந்தகுமார் ஆகியோர் முன்னிலையில், அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
அதில், 'பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்குவதுடன், அரசு சார்பில் வீடு கட்டி தர வேண்டும்.
யானைகள் வனப்பகுதியில் இருந்து கிராமங்கள் மற்றும் சாலைகளுக்கு வராமல் இருக்க தொங்கும் மின்வேலி அமைக்க வேண்டும்,' என்பன உட்பட பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அதிகாரிகள் கூறுகையில்,' இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதனை மக்கள் ஏற்றுகொண்டனர். எனினும், இரவு வரை கடைகள் அடைக்கப்பட்டன.
