/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் கட்டப்படும் மருத்துவமனை கட்டடம்
/
சாலையில் கட்டப்படும் மருத்துவமனை கட்டடம்
ADDED : நவ 27, 2025 04:41 AM

பந்தலுார்: பந்தலுார் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம் சாலையில் கட்டப்படுவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பந்தலுாரில் தாலுகா அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பெயரளவிற்கு மட்டுமே செயல்பட்டு வரும் மருத்துவமனையில், போதிய டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாத நிலையில், வெளி நோயாளிகள் மட்டும் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இங்கு கடந்த காலங்களில் செயல்பட்டு வந்த 'எக்ஸ்ரே' அறுவை சிகிச்சை அரங்கு உள்ளிட்ட, வசதிகள் முடக்கப்பட்டு செயல்படாமல் உள்ளது. இந்நிலையில், மருத்துவமனைக்கு கூடுதல், கட்டடம் கட்ட, 5 கோடி ரூபாய் மற்றும் உபகரண பொருட்கள் வாங்க, 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த, 2022ம் ஆண்டு, டெண்டர் விடப்பட்டு தொடர்ச்சியாக நல்ல நிலையில் இருந்த மருத்துவமனை டாக்டர்கள் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, கட்டடம் கட்டுமான பணி துவக்கப்பட்டது.
ஆமை வேகத்தில் நடைபெறும் இந்த பணியில் தற்போது நீதிமன்றம், அரசு துவக்கப்பள்ளி உள்ளிட்ட அரசு அலுவலங்களுக்கு, செல்லும் சாலையில் கட்டடம் கட்டுமான பணி துவக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடங்கள் கட்ட, அதிக அளவில் இடங்கள் இருந்தும், டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் அலட்சியத்தால், தற்போது சாலையில் கட்டட பணி துவக்கப்பட்டு உள்ளதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும், பழமையான கட்டடங்கள் மற்றும் நிலப்பகுதிகள் இருந்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் சாலையில் கட்டடம் கட்டுவது எதற்காக என்று தெரியவில்லை. அத்துடன் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டுமான பணியை துவக்காமல் தற்போது பெயரளவுக்கு துவக்கி நடத்தி வருவது குறித்து, மாவட்ட கலெக்டர் விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

