100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு? நீதி விசாரணை நடத்த கோரி தர்ணா
100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு? நீதி விசாரணை நடத்த கோரி தர்ணா
ADDED : ஜூலை 23, 2025 08:57 PM
பந்தலுார்; 'நெலாக்கோட்டை ஊராட்சியில், 100 நாள் வேலை திட்டத்தில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்,' என, வலியுறுத்தி, ஊராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு, தலைமை வகித்த சமூக ஆர்வலர் சங்கீதா கூறுகையில், ''நெலாக்கோட்டை ஊராட்சி வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில்,100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், பணிகள் மேற்கொண்டதில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளது. பணித்தள மேற்பார்வையாளர் நியமனத்தில், அதிகாரிகள் ஆதரவுடன் ஒரே பணித்தள மேற்பார்வையாளர். பல ஆண்டுகளாக பணியில் ஈடுபட்டு வருகிறார். வெளியூரில் உள்ளவர்களுக்கும், கலைஞர் கனவு இல்லம் வழங்கப்படுவதுடன், உள்ளூரில் உள்ள உண்மையான பயனாளிகளுக்கு கிடைப்பதில்லை.
இது குறித்து விசாரணை நடத்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு ஆதாரங்களுடன் பலமுறை புகார் கொடுத்தும் தீர்வு காணப்படவில்லை. இதனால், அரசு நீதி விசாரணை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும்,''என்றார். போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள் ராஜு, கார்த்திக், யசோதரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படு த்த முயன்றனர்.
